லோக்சபா தேர்தல் 2019 : மோடி, ராகுல்காந்தியின் வெற்றியை தீர்மானிக்கும் கிரகங்களின் கூட்டணி
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்தலில் வென்று ஆட்சியமைப்பது யார் என்று ஜோதிடர்களும் கண
Recommended Video

சென்னை: நாட்டின் அரியணையை கைப்பற்றப்போவது யார் பாஜகவா? காங்கிரஸ் கட்சியா? அடுத்த பிரதமர் மோடியா? ராகுல்காந்தியா என கருத்துக்கணிப்புகள் ஒரு பக்கம் இருக்க பெட்டிங்கும் ஆரம்பித்து விட்டது. கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வை ஆகியவைகளை வைத்து லோக்சபா தேர்தலில் வெல்லப்போவது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா? பாஜக தலைமையிலான கூட்டணியா என்று ஜோதிடர்களும் தங்கள் பங்குக்கு கணித்து கூறி வருகின்றனர்.
16வது லோக்சபாவிற்கான பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. 17வது லோக்சபாவிற்காக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்று பலவிதமான கருத்துக்கணிப்புகள் வெளியானாலும் ஜோதிடர்களும் தங்களின் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. லோக்சபா தேர்தல் உடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில சட்டசபைக்கான தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டதால் பொதுத் தேர்தல்களுடன் சேர்த்தே நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

543 தொகுதிகள்
நாட்டில் மொத்தம் 543 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடைபெறும். இதைத் தவிர, ஆங்கிலோ-இந்திய சமூக மக்களுக்கு லோக்சபாவில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் இரண்டு பேரை நியமிக்கலாம். மொத்த லோக்சபா தொகுதிகளில் 131 தொகுதிகள் தனித் தொகுதிகள் அந்த 131 தொகுதிகளில் பட்டியல் சாதிகளுக்கு 84 தொகுதிகளும், 47 தொகுதிகள் பட்டியல் பழங்குடி மக்களுக்கு எனவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த தனித் தொகுதிகளில் முறையே, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மட்டுமே போட்டியிட முடியும்.

பெரும்பான்மை தொகுதிகள்
பொதுத் தேர்தலில் ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டுமானால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு சில தொகுதிகள் குறைவாக இருந்தால், பிற கட்சிகளிடம் இருந்தோ, சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் கூட்டணி வைத்தும் ஆட்சி அமைக்கலாம்.

தேர்தல் தேதி அறிவிப்பு
கடந்த 2004ம் ஆண்டில், பிப்ரவரி 29ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடந்தது. கடந்த 2009ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலுக்கு தேர்தல் அட்டவணை மார்ச் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 16 முதல் மே 13ம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட்டு மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மே 16ம் தேதி நடந்தது. தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டு, அதிகபட்சமாக 75 நாட்களில் தேர்தலை நடத்தி முடித்துள்ளது.

ஆட்சி அமைத்த பாஜக
2004, 2009 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்த
பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது, பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவானது. பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தது. மோடி தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.

மோடி தலைமை
கடந்த பொதுத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு, அதிக இடங்களில் வென்ற கட்சியாக உருவெடுத்தது பாரதிய ஜனதா கட்சி. அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 272 உறுப்பினர்களைவிட 10 உறுப்பினர்களை அதிகமாக பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்குக் காரணம் மோடி அலைதான் என்று பேசப்பட்டது. மோடி தலைமையை ஏற்றுக்கொள்ள கூட்டணி கட்சியினர் தயாராக இருந்தனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 54 லோக்சபா தொகுதிகளை 22 கட்சிகள் வென்றன. அதாவது பாஜகவின் 282 தொகுதிகளுடன் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 335 என்ற நிலையில் இருந்தது.

மோடிக்கு எதிராக ராகுல்
இன்றைய தினத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டு முக்கியமான பெரிய கூட்டணிக் கட்சிகளாக சிவசேனா, தெலுங்கு தேசம் பாஜக உடன் இல்லை. இம்முறை கடந்த லோக்சபா தேர்தலைப் போல காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையோ, மோடிக்கு அதிக அளவிலான ஆதரவு அலையோ இல்லை என்றே கூற வேண்டும். கடந்த முறை பிரதமர் பெயரை கூறாமல் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி இம்முறை ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. கூடவே பிரியங்காவையும் புதிதாக களம் இறக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி

கிரகங்களின் இடப்பெயர்ச்சி
கட்சிகளின் கூட்டணி ஒருபக்கம் இருந்தாலும் கிரகங்களின் கூட்டணி, தசாபுத்தி, ஜாதக அமைப்பும் ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறவரின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அரசியல்வாதிகள் பலரும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே பல முடிவுகளை எடுக்கின்றனர். கடவுளை நம்பாத தலைவர்கள் கூட கடந்த சில ஆண்டுகளாக பரிகார பூஜைகள், ஜோதிட ஆலோசனைகளை செய்து வருகின்றனர். பொதுவாகவே கிரகப் பெயர்ச்சிக்கும், அரசியலுக்கும் தொடர்பு உண்டு. அரசியல் மாற்றத்திற்கு முக்கிய காரக கிரகங்கள் ராகு-கேதுவாகும். இரவோடு இரவாக ஒரு ஆண்டில் திடீரெ அரசனாவதற்க்கும் மாடு மேய்ப்பவன் மந்திரியாவதற்கும் குப்பையில் கிடப்பவன் குபேரனாவதற்கும் காரணம் சர்ப கிரகங்களே ஆகும். மார்ச் மாதத்தில் ராகு கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது மகரத்தில் இருந்து தனுசுக்கும் செல்கின்றனர்.

கிரகங்களின் கூட்டணி சாதகமா
தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஏப்ரல், மே மாதங்களில் தனுசு ராசியில் சனியோடு கேது அமர்கிறார். மிதுன ராசியில் ராகு அமர்கிறார். விருச்சிகத்தில் உள்ள குருபகவான் அதிசாரமாக தனுசு ராசியில் மூல நட்சத்திற்கு செல்கிறார். மே 18 வரை சஞ்சரிக்கும் அவர் பின்னர் வக்ர கதியில் பயணிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மோடி, ராகுல்காந்தி இருவருக்குமே ஆதரவானதாகவே இருக்கிறது. ஆனாலும் தசாபுத்தியின் படி பார்த்தால் மோடியின் கை ஓங்கியே இருக்கிறது என்கின்றனர் ஜோதிடர்கள்.

மோடிக்கு யோக ஜாதகம்
1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி பிறந்த நரேந்திர மோடி அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசிக்காரர். அனுஷம் பயங்கரமான நட்சத்திரம். சூழ்ச்சி, அறிவு, ராஜதந்திரம், சக்தி, மங்கள யோகம், ஜெகசேகரி யோகம் கொண்டது. இவர்கள் படித்த அறிவை விட பட்ட அறிவு அதிகம் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர் ஜாதகத்தில் சனி பகை வீடான சிம்மம் வீட்டில் அமர்ந்துள்ளார். பாட்டாளி மக்களின் வாக்குகள் முழுமையாக கிடைக்காவிட்டாலும் மேல் தட்டு வாக்காளர்கள் முழுமையாக மோடிக்கு சாதகமாக வாக்களிப்பார்கள். இவருக்கு பஞ்ச மகா புருஷ யோகத்தின் ஒன்றான ருசக யோகம் இருக்கிறது. இது ராஜயோகம். ராஜாங்க பாிபாலனம் செய்வதற்கு யோகம் தரும். விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் அடைந்து பங்கம் ஏற்படுவதால் நீச்சபங்க ராஜயோகம் விருச்சிகத்தில் சந்திரன் செவ்வாய் இணைந்து சந்திர மங்கள யோகம் உள்ளது.

மோடிக்கு சாதகமா
குருவின் சஞ்சாரம் மோடிக்கு சாதகமாகவே உள்ளது. மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும் கிரகங்களின் சஞ்சாரம் பிரதமர் மோடிக்கு வெற்றியை தேடித்தரும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மார்ச் 12 முதல் மே 19 வரை மோடிக்கு யோக காலமாகும். இந்த காலகட்டத்தில் தேர்தல் நடந்தால் பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் மோடி மீண்டும் பிரதமர் ஆவார். மே 20க்கு பிறகு லோக்சபா தேர்தல் நடந்தால் 250 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றும் பெரும்பான்மைக்கும் ஆட்சியை தக்கவைக்கவும் கூட்டணி கட்சிகளின் தயவை நாட வேண்டியிருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்தார் ராகுல் காந்தி. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3 மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருந்த பாஜகவை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த ராகுல்காந்தி தலைவரான பின்னர் ருசித்த முதல் வெற்றி. இதனையடுத்தே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அதனை ஏற்க வட இந்திய தலைவர்கள் விரும்பவில்லை. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. ராகுல் தலைமையை ஏற்க கூட்டணி கட்சிகள் விரும்பாது. பல கட்சிகள் அணிமாறி 3வது அணி உருவாகும் என்றும் இது பாஜகவிற்கே சாதகமாக அமையும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 90 இடங்களைப் பெறுவதே மிகவும் சிரமம் என்றும் கணித்துள்ளனர்.

லோக்சபா உடன் சட்டசபைத் தேர்தல்
தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகளை அறிவிக்கிறது. அதன்பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். எனவே பாஜகவின் ஆட்சிக்காலம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. பொதுத் தேர்தலுடன் சேர்த்து, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. விதிமுறைகளின்படி, சட்டசபை தேர்தல்கள் 6 மாதங்களுக்குள் நடைபெற வேண்டும். எனவே, ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்ளும், பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக அல்லது பொதுத் தேர்தல்களுடன் சேர்த்தே நடத்தப்படலாம்.

மோடி மீண்டும் வெல்ல வாய்ப்பு
பிரதமர் மோடியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் ஒரே ராசியாக இருந்தாலும் அவர்களின் நட்சத்திரங்கள் வேறு வேறாக இருப்பதால் தசாபுத்தியும் வேறு வேறாக உள்ளது. எனவேதான் ராகுல்காந்தியின் வெற்றிக்கு இது சாதகமாக இல்லை என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள். கடந்த தேர்தலைப் போல இல்லாமல் இந்த லோக்சபா தேர்தல் மோடிக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் அதற்குக் காரணம் ராகுல்காந்தி மாத்திரமல்ல, பிரியங்காவும் அரசியல் களத்தில் இறங்கியிருப்பதுதான் என்கின்றனர். என்னதால் சவால்கள் இருந்தாலும் அதனை வெற்று சாதனைகளாக்கி 2024 மட்டுமல்ல 2029 வரை பிரதமர் மோடி அசைக்கமுடியாத தலைவராக இருப்பார் என்கின்றனர் ஜோதிடர்கள்.












Click it and Unblock the Notifications