சனி அமாவாசை 2021: ஏழரை சனியால் ஏற்படும் சங்கடம் தீர இதை மறக்காமல் செய்யுங்கள்
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் கஷ்டப்படுபவர்கள் சனிக்கிழமை அமாவாசை வரும் நாளில் மறக்காமல் சில பரிகாரம் செய்ய வேண்டும்.
சென்னை: கார்த்திகை மாத அமாவாசை டிசம்பர் 4ஆம் தேதி அதாவது சனிக்கிழமை வருகிறது. சனி அமாவாசை நாளில் நீங்கள் சில செயல்களைச் செய்தால் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் கஷ்டப்படுபவர்கள் சனிக்கிழமை அமாவாசை நாளில் சில பரிகாரங்களை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.
பொதுவாகவே அமாவாசை திதி தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து தானம் கொடுப்பார்கள். காக்கைக்கு உணவு கொடுப்பார்கள். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்கள்தான் சிறப்பானது என்று புனித தீர்த்தங்களில் நீராடி படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.

தர்ப்பணம் செய்யாவிட்டால் தோஷம் வரும்
புனிதமான தர்ப்பணங்களை செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

அமாவாசை தர்ப்பணம்
ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வரும் என்றாலும், சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபட, சனி அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணமும், அவர்களை நினைத்து செய்யும் நல்ல காரியங்களாலும் பலன்கள் அதிகரிக்கும்.

ஆசி தரும் முன்னோர்கள்
முன்னோர்களின் ஆசியால் இதுநாள்வரை தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென நடைபெறும். நாம் கொடுக்கும் தர்ப்பணத்தில் மகிழ்ச்சியடையும் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதிப்பார்கள். இதனால் தரித்திரம் விலகும் ஐஸ்வர்யம் பெருகும். எனவே மறக்காமல் சனி அமாவாசை நாளில் மறக்காமல் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியை பெறலாம்.

அன்னதானம்
சனிக்கிழமை தினத்தில் அமாவாசை வருவது விஷேசமானது. அன்றைய தினம் சனிபகவானையும் வழிபடலாம். முன்னோர்களையும் வழிபட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலிட்டு இயலாதவர்களுக்கு தானம் கொடுக்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்
உங்களுக்கு ஏழரை நாட்டு சனி நடைபெறுகிறது என்றால் அந்த பாதிப்பில் இருந்து விடுபட சனி அமாவாசை நாளில் அரசமரத்தை வழிபட வேண்டும். அரச மரத்தில் தெய்வங்களும், முன்னோர்களும் வசிக்கிறார்கள் என்ற ஆன்மீக நம்பிக்கை உள்ளது. எனவே, அமாவாசை தினத்தில் அரச வழிபாடு செய்வதன் மூலம் தெய்வங்களின் அருளும், முன்னோர்களின் அருளும் ஒரு சேர கிடைக்கும். அரச மரத்திற்கு நீர் ஊற்றி அதை சுற்றி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.அரச மரக் கன்றை நடுவதன் மூலம் ஜாதகத்தில் உள்ள சனி தோஷங்களும் நீங்கும்.












Click it and Unblock the Notifications