வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் வேடுபறி - தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் ஸ்ரீரங்கம் கோயிலின் நான்காம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் மிக விமர்சியாக நடைபெற்றது.
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் ராப்பத்து விழாவின் எட்டாம் நாளன்று தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி வகையறா கண்டருளினார். அப்போது மணல்வெளியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ரங்க மன்னா ... கோவிந்தா என்று பக்திப்பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.
தினசரியும் பகல் பத்து திருவிழாவில் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். பகல்பத்து திருவிழாவின் ஒன்பதாவது நாளில் நம்பெருமாள் மோகினி அலங்காரம் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
சொர்க்கவாசல் திறப்பு
முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் நடைபெற்றது. இதனை அடுத்து இராப்பத்து திருவிழா துவங்கி நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பரமபத வாசல் வழியாக ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நம்பெருமாள் சேவை
இராப்பத்து உற்சவத்தின் 7 ஆம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குச நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டினர். அர்ச்சகர்களின் கைகளில் இருந்து நம்பெருமாள் சேவை சாதிப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு திருக்கைத்தல சேவை என்று பெயர்.
தங்கக் குதிரை வாகனம்
ராப்பத்து விழாவின் 8 ஆம் நாளான்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோயிலின் நான்காம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் மிக விமர்சியாக நடைபெற்றது. பரமபதவாசல் திறப்பு கிடையாது. வேடுபறி நிகழ்ச்சியையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளினார். அப்போது மணல்வெளியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ரங்க மன்னா ... கோவிந்தா என்று பக்திப்பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
ஆட்கொண்ட பெருமாள்
திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை எல்லாம் இழந்த திருமங்கை மன்னன் தனது பெருமாள் கைங்கர்யம் தொடர வேண்டும் என்பதற்காக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தாகவும், அவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் 'ஓம்நமோ நாராயணாய' எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்டதே இந்த வேடுபறி திருவிழா என்று கூறப்படுகிறது.
இயற்பா சாற்றுமறை
இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார். அங்கு இரவு 8.15 மணிமுதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். வரும் 23ஆம் தேதி தீர்த்தவாரியும், 24ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது.