சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தஞ்சை பெரியகோவில் - பந்தக்கால் நடப்பட்டது - ஏப்.13ல் தேரோட்டம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் மார்ச் 30ஆம் தேதியன்று கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கி வரும் ஏப்ரல்16ஆம் தேதி வரை 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தஞ்சாவூர்: உலகப் பாரம்பரிய கலைப்பண்பாட்டுச் சின்னமான தஞ்சை பிரகதீஸ்வரர் என்னும் பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழாவிற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய கோயில் தேரோட்ட வைபவம் ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
தமிழர்களின் கலை, அறிவியல், பண்பாட்டிற்கு சான்றாக விளங்குவது தஞ்சையிலுள்ள பெருவுடையார் என்னும் பெயர் பெற்ற பிரகதீஸ்வரர் கோயில். உலக பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோ அமைப்பின் பட்டியிலில் இடம் பெற்றதாகும்.
இக்கோயிலின் அழகையும், கலைச்சிற்பங்களை கண்டுகளிக்கவும், மூலவரான பெருவுடையாரைக் கண்டு தரிசிக்கவும் தமிழகம் மட்டுமல்லாது, பிற நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் வருவதுண்டு.
முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் முதல்வர் - வைரமுத்து வாழ்த்து
சித்திரை திருவிழா
பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக, வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் வரலாற்றில், கடந்த இரண்டு ஆண்டுகளும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படவில்லை. இதையொட்டி நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.
தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா
இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அடுத்தடுத்து மாசி விழா, சித்திரைத் திருவிழா என களைகட்டி வருகின்றன. அதே போல் தஞ்சை பெரிய கோயிலும் சித்திரைத் திருவிழாவைக் கொண்டாட ஆயத்தமாக வருகின்றது
ஏப்ரல் 13ல் தேரோட்டம்
பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் மார்ச் 30ஆம் தேதியன்று கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கி வரும் ஏப்ரல்16ஆம் தேதி வரை 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகளின் புறப்பாடு ஏப்ரல் 12ஆம் தேதியும், அதையடுத்து தேரோட்ட வைபவம் ஏப்ரல் 13ஆம் தேதியன்றும் நடைபெறும்.
பந்தல்கால் முகூர்த்தம்
இவ்விழாவுக்கான ஆரம்ப நிகழ்ச்சியாக, பந்தல்கால் நடும் வைபவம், நேற்று பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதை முன்னிட்டு, பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பந்தல்கால் நடப்பட்டு, பின்னர் தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், அறநிலையத்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், மற்றும் கோயில் சிவாச்சாரியர்களோடு திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.