திருவண்ணாமலை: 2,668 அடி உயர மலை உச்சியில் பிரம்மாண்ட கொப்பரையில் 11 நாட்கள் எரியும் மகா தீபம்
கார்த்திகை தீபத்திருவிழாவையை முன்னிட்டு அண்ணாமலையார் குடிகொண்டிருக்கும் 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு இன்று அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதையடுத்து, கொப்பரையை கோவில் ஊழியர்கள் இன்று மலைக்கு எடுத்துச் சென்றனர். அதிகாலையில் பரணி தீபமும் மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. பிரம்மாண்ட கொப்பரையில் ஏற்றப்படும் மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் வெளி மாவட்ட பக்தர்கள் தீப தரிசனத்தைக் காண மாநில அரசு தடை விதித்து உள்ளது. திருவண்ணாமலை நகருக்கான புதிய கட்டுப்பாடுகள் நேற்று பிற்பகல் 1 மணி முதல் வரும் 20ஆம் தேதி வரை அமலுக்கு வந்துள்ளது.
திருவண்ணாமலைக்கு இன்று முதல் 20ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்டு வந்த பாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் 20ஆம் தேதிவரை நிறுத்தப்பட்டு உள்ளது. கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீப விழா நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தவறானவர்கள் கையில் கிரிப்டோகரன்சி செல்வதை தடுக்க வேண்டும்- உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
மகாதீப கொப்பரை
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கிய நிகழ்வாக நாளை மகாதீபம் மலையின் உச்சியில் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று அதிகாலை திருக்கோவிலினுள், தீபக் கொப்பரைக்கு, சிறிய நந்தி சந்நதிக்கு முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் ஊழியர்கள் 15 பேர் மூலமாக 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியின் மீது மகாதீப கொப்பரையை தோளில் சுமந்தபடி சென்றனர்.
3500 லிட்டர் நெய்
5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட இந்த மகா தீப கொப்பரையானது பஞ்சலோகத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று அடுக்குகளாக செய்யப்பட்டது. மகாதீப கொப்பரையில் ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மகாதீபம்
வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். பின்னர் , மாலை 6 மணியளவில் கோயில் தீப தரிசன மண்டபத்தின் முன்பாக ஆணும், பெண்ணும் சமம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அர்த்த நாரீஸ்வரர் காட்சியளிக்கும் நிகழ்வும் நடைபெறும். அதே நேரத்தில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா
தமிழகத்தில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று மாலையில் வீடுகளில் பரணி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். நாளை திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும் அதற்குப் பின்னர் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். மறுநாள் சனிக்கிழமை ரோகிணி நட்சத்திரதன்று விஷ்ணு தீபம் ஏற்றப்படும்.
11 நாட்கள் தீபத்தை காணலாம்
2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், நாளை மாலை ஏழரை அடி உயரம் கொண்ட கொப்பரையில், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, 3 ஆயிரம் கிலோ பசுநெய், 2 கிலோ கற்பூரம் சேர்த்து இந்த தீபம் ஏற்றப்படும் போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கம் விண்ணை எட்டும் இதனையடுத்து வாண வேடிக்கை நடைபெறும். மலை மீது ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் தீபம் அணையாது என்பது அதிசயமாகும்.