திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்..பிரம்மாண்ட ஏற்பாடுகள் - மலையப்பசாமியை தரிசிக்க தயாரா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 1ஆம் தேதி கருட சேவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இந்த ஆண்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 1ஆம் தேதி கருட சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரம்மோற்சவத்தில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வராமல் ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடைபெற்றது.
ஆன்லைனில் புக் செய்து வந்தவர்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாட வீதிகளில் வாகன சேவை நடக்கவில்லை. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலேயே உற்சவர்களை அலங்காரம் செய்து ஒரு சில பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டனர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்வு திருக்குளத்தில் நடைபெறாமல் தொட்டியில் உள்ள நீரில் நடைபெற்றது.
திருமலை பிரம்மோற்சவம்
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார். அக்டோபர் மாதம் 1ஆம்தேதி கருட சேவை, 2ஆம் தேதி தங்க தேரோட்டம், 4ஆம் தேதி தேரோட்டம், 5ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
மாட வீதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரமோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள்ளே நடந்தது. இந்த முறை அதிகளவில் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு ஏற்ப பிரமாண்ட ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாட வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வலம் வரும் மலையப்பசுவாமியைக் காண தினசரியும் பல லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருட வாகன சேவை
கருட சேவை புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்பார்கள். சாதாரண பக்தர்கள் அதிக நேரம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும். முக்கியமான வி.ஐ.பி.களுக்கு மட்டும் பிரேக் தரிசனம் வழங்கப்படும். பிரம்மோற்சவ விழா நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கு தடை
பிரம்மோற்சவ விழா நாட்களில் தூய்மையாக வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கருட சேவை அன்று பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் திருமலைக்கு வர தடை விதிக்கப்படுகிறது. திருப்பதியில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பக்தர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு அரசு பஸ்களில் திருமலைக்கு வரலாம்.
3 வேளை அன்னதானம்
கருட சேவைக்கு முன்தினமும், கருட சேவை அன்றும் கருட சேவைக்கு மறுநாளும் பக்தர்களுக்கு ஆன்லைனில் தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்பட மாட்டாது. மற்ற நாட்களில் 50 சதவீத அறைகள் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்படும். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். கேலரியில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு உணவ கவுண்டர்கள் அமைத்து 3 வேளை உணவு, குடிநீர், மோர் ஆகியவை விநியோகம் செய்யப்படும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் கண்ணாடி அல்லது தாமிரம் அல்லது ஸ்டீல் குடிநீர் பாட்டில்களை கொண்டுவர வேண்டும். இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் 9 நாட்களும் திருமலையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தி சேனல் மூலம் அனைத்து வாகன சேவைகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.