வரலக்ஷ்மி பூஜை: உண்ணாநோன்பிருந்து வரலட்சுமியை வணங்கினால் மாங்கல்ய தோஷம் நீங்கும்
இன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு கண்நிறைந்த கணவன் வேண்டும் என்றும் விரதம் இருந்து வரலட்சுமியை வழிபடுகின்றனர்.
மதுரை: இன்றைய தினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. கணவனின் ஆயுள் நீடிப்பதற்காக இன்றைக்கும் பல பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுகின்றனர். அதே போல கன்னிப்பெண்களும் கண்நிறைந்த கணவன் வேண்டும் என்று நோன்பிருந்து அன்னையை வழிபடுகின்றனர். கணவனுக்காகவும் அவரது ஆயுள் பலத்திற்காகவும் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டு தோறும் வரலட்சுமி விரதம், காரடையான் நோன்பு என பல விரதங்களை இருக்கின்றனர். மாலை நேரத்தில் சிறு குழந்தைகள், கன்னிப்பெண்கள், திருமணம் ஆன சுமங்கலிப்பெண்கள் என அனைவரையும் அழைத்து மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு, வளையல், ரவிக்கைத்துணி போன்றவைகளை பிரசாதமாக அளித்து ஆசி பெறுகின்றனர்.

மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்கிறார்கள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
ஜாதகத்தில் சுக்கிர தோஷம் இருப்பவர்கள் வரலட்சுமி விரதம் இருந்து வணங்கினால் தோஷங்கள் நீங்கும். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் தங்களின் கணவன் முழு ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் இருக்க இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இதேபோல். திருமண தோஷங்கள் உள்ள கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடக்கவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.
ஒருவரின் திருமண வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் வலிமைப் பெற்றிருக்க வேண்டும். சுக்கிரன் கன்னியில் நீச்சம் பெற்றிருந்தாலும் செவ்வாயுடன் கன்னி ராசியில் சேர்ந்திருந்தாலும் சுக்கிரனின் வலிமை குன்றிவிடும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல சுகங்களை அனுபவிப்பதில் தடைகள் ஏற்படும். திருமணம் நடைபெறுவது தாமதமாவதுடன், இல்லற வாழ்க்கையிலும் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 8ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பதும் சுக்கிர தோஷமாகும். அந்த 8ஆம் வீடு சுக்கிரனின் ஆட்சி வீடுகளாகிய ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளாகவோ, உச்ச வீடான மீன ராசியாகவோ இருந்தால், சுக்கிரனால் தோஷம் ஏற்படாது. ஜாதகத்தில் சுக்கிரன் 7ஆம் வீட்டில் இருப்பதும் 3, 6, 12 ஆகிய இடங்கள் ஒன்றில் மறைவு பெற்றிருப்பதும் தோஷத்தை ஏற்படுத்தும்.
வெள்ளிக்கிழமைகளில் வீட்டுப் பூஜையறையில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்து, நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில், கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.
உண்ணாமல் விரதம் இருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவை மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.
இந்த விரதம் இருப்பதன் மூலம் நம்முடைய வீட்டில் செல்வம், தானியம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற அத்தனை செல்வங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. எனவேதான் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்றைய தினம் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு வீடுகளை சுத்தம் செய்து அம்மனை கலச வடிவில் அலங்கரித்து இருந்தனர்.
விரதம் இருக்கும் பெண்கள் சர்க்கரைப்பொங்கல், பாயாசம், கொலுக்கட்டை படையலிட்டு வளையல், நோன்புக்கயிறு வைத்து வழிபடுவது வழக்கம். சிறு குழந்தைகளுக்கு பாத பூஜை செய்வார்கள். அதே போல சுமங்கலி பெண்களுக்கும் பாத பூஜை செய்து விட்டு அனைவருக்கும் நோன்புக்கயிறு, வளையல், ரவிக்கைத்துணி, மஞ்சள் குங்குமம் கொடுத்து ஆசி பெறுவார்கள்.
வரலட்சுமி பூஜை செய்வதன் மூலம் சுமங்கலிப்பெண்களின் ஆசி கிடைப்பதோடு அன்னை வரலட்சுமியின் ஆசியும் கிடைக்கும் தோஷங்கள் நீங்கி கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பது நம்பிக்கை. எனவேதான் இன்றைய தினம் கன்னிப்பெண்களும் சுமங்கலிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications