விநாயகர் சதுர்த்தி..பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஆக.22ல் கொடியேற்றம் - 30ல் தேரோட்டம்
சிவகங்கை: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியான 10ஆம் திருநாள் அன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உலக புகழ் பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு விநாயகப் பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது சிறப்பம்சம். சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு திகழ்கிறார் விநாயகர்.
அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது. வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்கிறார். இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலத்திலும் வலக்கரத்தில் மோதகம் தாங்கி அருள்கிறார். ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குறுகியும் காணப்படுவது விநாயகருக்கு சிறப்பம்சம்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடியேற்றம் தொடங்கி விழா நாட்களில் இரவு கற்பகவிநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். முதல் நாள் இரவு மூஷிக வாகனத்திலும், 2ஆம் நாள் சிம்ம வாகனத்திலும், 3ஆம் நாள் பூத வாகனத்திலும், 4ஆம் நாள் கமல வாகனத்திலும், 5ஆம் நாள் ரிஷிப வாகனத்திலும் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
6ஆம் நாள் விழாவான வரும் 27ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7ஆம் நாள் திருவிழாவில் மயில் வாகனத்திலும், 8ஆம் நாள் திருவிழா அன்று குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. தேரோட்டம் 9ஆம் நாள் திருவிழாவான 30ஆம் தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டமும் நடக்கிறது.
அன்றைய தினம் ஆண்டுக்கு ஒரு முறை மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியான 10ஆம் திருநாள் அன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது.
400 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை.. காஞ்சிபுரத்தில் அதிரடியாக மீட்ட சுங்கத் துறை
விழாவையொட்டி தினந்தோறும் இரவு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நாச்சியப்பசெட்டி கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சிதம்பரம்செட்டி சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.