For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ரொம்ப வேகமாக இருக்கீங்க"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (12)

Google Oneindia Tamil News

சுதா அறிவழகன்

ப்ரீத்தி அப்படிச் சொல்லியதும் சுனிலுக்குள் அட்ரீனல் சுரப்பியின் வேகம் தாறுமாறாக அதிகரித்தது. உடம்பு சூடாவதைப் போல உணர்ந்தான்.. உணர்வுகள் உந்தித் தள்ள.. ப்ரீத்தியின் கையைப் பிடித்து பின்புறமாக முத்தமிட்டான்.

இதை ப்ரீத்தி எதிர்பார்க்கவில்லை. உடம்புக்குள் உஷ்ணம் காற்று போல பரவுவதாக உணர்ந்தாள்.. கூடவே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு.. பூரிப்பாக.. பொங்கி வரும் காவிரி போல.. குபுகுபுவென மோதி மோதி அவளது கரைகளை உடைத்தது. ப்ரீத்திக்குள் எழுந்த அந்த சந்தோஷ அலைகள்.. சுனிலின் மனதையும் தொடாமல் இல்லை.. தொட்ட வேகத்தில் அவனும் அதில் அமிழ்ந்தான்.

Nilavkukku Neruppendru Peyar Tamil series episode 12

"என்னாச்சு சுனில்.. ரொம்ப வேகமாக இருக்கீங்க"

"நான் மட்டுமா"

"இல்லையே.. நான் நார்மலாதான் இருக்கேன்"

"ம்க்கும்.. இங்க சுடுது உன்னோட உஷ்ணப் பெருமூச்சு"

"அங்க மட்டும் என்ன வாழுதாம்.. அனலடிக்குது"

இருவரும் கடகடவென வாய் விட்டு இணைந்து சிரித்தனர்.. அந்த சிரிப்பில் தெரிந்தது.. இருவரின் மனசும் இணைந்து ஒன்றாக மாறி கூடி கும்மாளமிட்டு மகிழ்வது.

"ப்ரீத்தி.. அந்த தக்காளிக்குத்தான் நாம நன்றி சொல்லணும்"

"ஆமா..."

"இல்லாட்டி இப்படி ஒரு ஆப்பிள் கிடைச்சிருக்குமா எனக்கு"

"எது ஆப்பிள்.. நானா"

"ஆமா.. அதை விட இது சூப்பரா இருக்கு"

"இருக்கும் இருக்கும்"

"ஆப்பிளுக்கே வெட்கம் வரும் உன்னைப் பார்த்தா"

"அப்படியா.. வரும் வரும்"

"என்ன இரட்டைக் கிளவியாட்டம் பேசற"

"யாரு கிழவி"

"அது கிழவி இல்லை டார்லிங்.. . கிளவி"

"டார்லிங்கா"

"ஆமா.. நீதான் என்னோட டார்லிங்"

"அது சரி.. அப்படில்லாம் கூப்பிட்டா வெட்கமா இருக்கு சுனில்.. ஒரு மாதிரி பீல் ஆகுது"

"ஆகும் ஆகும்"

கலகலவென சிரித்தாள் ப்ரீத்தி.. சுனில் தன்னைக் கேலி செய்வதைப் பார்த்து.

திடீரென படாரென திறந்தது கதவு.. நர்ஸ்.!

"மேடம் உங்க அம்மாவுக்கு திடீர்னு மயக்கம்.. விழுந்துட்டாங்க.. பக்கத்து வார்டுதான்.. முடிஞ்சா வந்து பாருங்க"

ஷாக் ஆகி விட்டாள் ப்ரீத்தி.. சுனிலுக்கோ அதிர்ச்சி.. என்னாச்சு!

"அம்மா" வீறிட்டழுதபடி ஓடினாள் ப்ரீத்தி.

மயக்கமடைந்த அம்மாவைப் பார்த்து அழுது விட்டாள் ப்ரீத்தி.. தனக்கு விபத்து என்று வந்து சேர்ந்த இடத்தில் அம்மா விழுந்து விட்டது அவளை நிலை குலைய வைத்து விட்டது.

"என்னாச்சு டாக்டர் அம்மாவுக்கு"

"ஒன்னும் இல்லம்மா.. பிபி ஏறிருக்கு.. மயங்கிட்டாங்க. பயப்பட ஒன்னுமில்லை, யூ பி ரிலாக்ஸ்ட்"

டாக்டர் ஆறுதலாக சொன்னாலும் கூட ப்ரீத்திக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மாதான் அவளுக்கு உலகமே.. அம்மாவைத் தவிர வேறு எதையும் அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ப்ரீத்திக்கு 12 வயது இருக்கும்போது அவளது அப்பா ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அதன் பிறகு ப்ரீத்தியை படித்து ஆளாக்கியது எல்லாமே அம்மாதான்.

தனி ஒரு மனுஷியாக கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டு சிரமப்பட்டுத்தான் மகளை வளர்த்தார். சிங்கிள் உமன் படும் அத்தனை கஷ்டத்தையும் இவரும் சந்தித்தார். ஆனாலும் அவரது வைராக்கியம் அவரை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காத்தது.. ப்ரீத்தியும் விவரம் புரிய ஆரம்பித்த காலத்திலிருந்து அம்மாவுக்கு அத்தனை அனுசரணையாக இருந்து வந்தாள்.. அம்மாவின் கஷ்டம் அவளுக்கு நன்றாகவே புரியும். அம்மா மனசு கோணும்படி நடந்து கொண்டதே கிடையாது.

அம்மாவின் அருகே அமர்ந்து அவரது தலையை வருடிக் கொடுத்தாள் ப்ரீத்தி.. கண்களிலிருந்து சிந்திய கண்ணீர்.. அம்மாவின் கன்னத்தை தொட்டு வழுக்கி ஓடியது.. அம்மா கண் திறந்து மேலே நிமிருந்த ப்ரீத்தியைப் பார்த்தார்.. அந்தப் பார்வையில் எனக்கு ஒன்னும் ஆகாதுடா என்ற நம்பிக்கை தெரிந்தது.. ப்ரீத்திக்கு அடக்க மாட்டாமல் முட்டிக் கொண்டு வந்தது அழுகை.. மெல்ல தோளில் வந்து விழுந்தது சுனிலின் கை.. தோளை அழுத்துப் பிடித்த சுனிலை திரும்பிப் பார்த்தாள் ப்ரீத்தி.. "நான் இருக்கேன்" என்ற நம்பிக்கை அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தது.

"ப்ரீத்தி"

அம்மாவிடமிருந்து வந்தது மெல்லிய குரல்.. திரும்பிப் பார்த்தாள் ப்ரீத்தி.

(தொடரும்)

பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,11 ]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X