"விழ மாட்டோம்ல".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (11)
சுதா அறிவழகன்
ப்ரீத்திக்கு இருப்பு கொள்ளவில்லை.. எங்கு போய் விட்டான் இந்த சுனில்.. ரொம்ப நேர ஆளைக் காணோமே என்று வாசலுக்கும், பெட்டுக்குமாக நடை போட்டுக் கொண்டிருந்தாள் அந்தக் காலத்து சரோஜாதேவி மாதிரி.
பெட்டிலிருந்து மீண்டும் வாசல் நோக்கி அவள் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தபோது, விருட்டென்று உள்ளே நுழைந்தான் சுனில்.. கிட்டத்தட்ட இருவரும் மோதிக் கொண்டிருப்பார்கள்.. மயிரிழையில் இருவரும் மோதாமல் அப்படியே நின்றனர்.. ஸ்டன் ஆகி தடுமாறி விழப் போனாள் ப்ரீத்தி.. மெல்லை கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் சுனில்.
சுனிலை அத்தனைக் கிட்டக்க பார்த்ததால் மனசுக்குள் ஏதோ ஆக.. கசமுசவென்று உணர்ந்தாள் ப்ரீத்தி.. மார்பு ஏறி இறங்கியது. சுனிலிடமிருந்து வந்த அந்த வாசம் அவளை ரொம்ப ஈர்த்தது.. ஓ.. இதுதான் ஆண் வாசனையோ.. நல்லாருக்கே.. என்று கிடுகிடுவென்று வேகம் பிடித்தது அவளது காதல் மனசு.
அவளது முகத்தில் ஓடிய உணர்வுகளை மோப்பம் பிடித்த சுனிலின் இதழ்கள் மெல்லப் புன்னகைக்க.. சட்டென்று இயல்புக்கு வந்தாள் ப்ரீத்தி.. எட்டி நின்று.. "இப்படியா நுழைவீங்க.. மெதுவா வரக் கூடாது.. விழுந்திருப்பேன்.. நல்லவேளை பிடிச்சுட்டேன்"
"யாரு நீங்க.. பிடிச்சீங்க.. அலோ.. நான்தான் நீங்க கீழே விழாம இருக்க பிடிச்சுக்கிட்டேன்".. சுனில் முகத்தில் குறும்பு.
"ஏதோ ஒன்னு. இப்ப அதுவா முக்கியம்.. நான் விழலல்ல.. அதுதான் மேட்டர்.. விழ மாட்டோம்ல".. பதிலுக்கு டபுள் மீனிங் பேச்சை அவிழ்த்து விட்டாள் ப்ரீத்தி.. முகத்தில் வெட்கம் இன்னும் போகலை.. சிவந்த முகம் இயல்புக்குத் திரும்பலையே.. சுனில் அதைக் கவனிக்காமல் இல்லை.
"சரி.. சரி எங்க போய்ட்டீங்க.. ரொம்ப நேரமா.. ஆளே காணலை.. நான் பயந்துட்டேன் தெரியுமா"
"அதுவா. போன் பண்ணப் போனேன்.. அப்பத்தான் டாக்டர் மலர் விழியை சந்திச்சேன். ரொம்ப நாளாச்சா பேசி.. அதான் பேசிட்டிருந்தோம்.. " சுனில் சொல்லிக் கொண்டே போக.. ப்ரீத்தியின் சிவந்த முகம்.. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக சிவந்தது.
"அவங்க கூட எதுக்கு இவ்வளவு நேரம் பேச்சு.. அதுவும் என்னை மறந்துட்டு..." சுவரை நோக்கிப் பார்த்தபடி குரலில் லேசாக உஷ்ணத்தைக் கலந்து வீசினாள் ப்ரீத்தி.. இருக்காதா பின்னே!
சுனிலுக்கு ஒரே சிரிப்பு.. வாய் விட்டு சிரிக்க முடியாதே.. மெல்ல மென்று விழுங்கியபடி.. "அதுவா.. அவங்க ரொம்ப நல்ல டைப் தெரியுமா.. பேசினா கேட்டுட்டேஇருக்கலாம்.. அப்படிப் பேசுவாங்க.. தெரியுமா ப்ரீத்தி" எரியும் நெருப்பில் வேண்டும் என்றே பெட்ரோலை ஊற்றி வேடிக்கை பார்த்தான்.. ஓரக் கண்ணால்.
"ஓஹோ.. ரொம்ப இனிப்பா பேசுவாங்களோ.. இருக்கட்டும் இருக்கட்டும்.. ஓவரா ஸ்வீட் சாப்பிட்டா சுகர் வந்து சீக்கிரம் செத்துப் போய்ருவோம்.. மனசுல இருக்கட்டும்" என்று நொடித்தும் வெடித்தும் முடித்து வைத்தாள் அந்தப் பேச்சை ப்ரீத்தி.
இதற்கு மேல் தாங்க முடியாது என்று உணர்ந்த சுனில் வாய் விட்டு பகபகவென சிரித்தான்.
அதே வேகத்தில் அப்படியே தனது இரு கைகளாலும் ப்ரீத்தியை பிடித்து அருகே இழுத்து அவளது கண்ணைப் பார்த்தான்.. "இங்க பாரு.. நான் உன்னை லவ் பண்றேன்.. உன்னை மட்டுமே லவ் பண்றேன்.. நீதான் என் பொண்டாட்டி.. போதுமா" என்று சுனில் சொல்லச் சொல்ல.. ப்ரீத்திக்கு மூச்சு வேகமாக அடிக்கத் தொடங்கியது.. இத்தனை நெருக்கத்திலா.. அதுவும் சுனிலா.. என் சுனிலா.. என்னவனா.. என்று என்னென்னமோ மனசுக்குள் ஓட அவளையும் அறியாமல்.. சுனிலின் மார்பில் முகம் புதைத்தாள்.
சாய்ந்த ப்ரீத்தியை மெல்ல அணைத்துக் கொண்ட சுனில்.. அவளது தலையைத் தூக்கி நெற்றியில் முத்தமிட்டான்.. "சத்தியமா நீதான் என் பொண்டாட்டி.. ஆயுசுக்கும் நீ மட்டும் போதும்" என்று மெல்ல காதருகில் சொல்ல.. கண்ணை மூடி அவனை சந்தோஷமாக உள் வாங்கினாள் ப்ரீத்தி.. கண்களிலிருந்து மெல்ல சிந்தியது கண்ணீர்.. அது ஆனந்தத்தின் அதி ரூப வெளிப்பாடு.. அந்த கண்ணீரை விரலால் சுண்டி விட்ட சுனில்.. அப்படியே அவளை படுக்கையில் அமர்த்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான்.. ப்ரீத்தியும் சகஜ நிலைக்குத் திரும்பினாள்.. ஆனால் வெட்கம் மட்டும் போகவில்லை.. இருவருக்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.. மெல்லிய மெளனம் வந்து விளையாடியது.
அப்போது சுனிலின் சட்டைப் பையிலிருந்த செல்போன் ஒலித்தது.. மெல்ல எடுத்து ப்ரீத்தியை பார்த்தபடியே காதில் போனை வைத்து ஹலோ என்றான்.. மறுமுனையில் யார் பேசினார்களோ தெரியவில்லை.. சுனிலின் முகம் மெல்ல மாறியது.. இறுகியது.. "ஹலோ.. என்ன சொல்றீங்க".
மறுமுனையில் இருந்தது சுனிலின் மாமா ராமலிங்கம்தான்..
"என்ன மாமா சொல்றீங்க. ராஜிக்கு என்னாச்சு"
"திடீர்னு மயங்கி விழுந்துட்டா மாப்ளை.. டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயிருக்கோம். இன்னும் மயக்கம் தெளியலை.. ஸ்கேன் பார்க்கலாம்னு சொல்றாங்க..எனக்குப் பயமா இருக்கு மாப்ளை"
"பயப்படாதீங்க மாமா. ஒன்னும் இருக்காது. ஸ்கேன் எப்பப் பண்ணப் போறீங்க"
"தெரியலை மாப்ளை.. அடுத்து அதுதான் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். அம்மாவுக்கு தகவல் சொல்லிரு.. நான் அப்புறமா பேசுறேன்"
"சரி மாமா.. கவலைப்படாதீங்க.. பணம் ஏதாவது வேணும்னா சொல்லுங்க. போட்டு விடறேன்.. தைரியமா இருங்க. ராஜிக்கு எதுவும் ஆகாது"
போனை வைத்தான் சுனில். மனசுக்குள் ஒரு இறுக்கம்.. ராஜிக்கு என்னாச்சுன்னு தெரியலையே.. என்ற கவலை அவனை அலைக்கழித்தது.. கையோடு வீட்டுக்கும் போனைப் போட்டு அம்மாவுக்கும் பொதுவாக தகவல் சொல்லி வைத்தான்.
"என்னாச்சுங்க" என்ற ப்ரீத்தியின் குரல் சுனிலை இயல்புக்குக் கொண்டு வந்தது.
"என்னோட அம்மாவோட அண்ணன் பொண்ணு. பேரு ராஜி.. திடீர்னு மயங்கி விழுந்திருக்கா.. என்னன்னு தெரியலை.. மாமாதான் போன் பண்ணார்.. பாவம் நல்ல பொண்ணு.. என்னாச்சுன்னு தெரியலை "
"ஓ.. கவலைப்படாதீங்க. சரி ஆய்ரும் . நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க"
"ம்.. சரி ப்ரீத்தி.. ஸாரி.. பாதியிலேயே நம்ம கவனம் சிதறிப் போய்ருச்சு.."
"இல்லையே.. அதான் முடியலையே.. இன்னும் கூட தொடரலாமே" ப்ரீத்தியின் குரலில் காதல் டன் கணக்கில் வழிந்தது.
(தொடரும்)
பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ]