சரி நிகரல்லவா நாங்கள்...

மெல்லிய பூக்களை ஊசி கொண்டு
கோர்க்கும் போது நடுங்கும் கைகளில்
ஒளித்து வைத்திருக்கிறாய்-உன்
வெண் பஞ்சு இதயத்தை...
கருமையின் அழகினை வெளிப்படுத்த
வெண்மையை அதிகரித்தாய் உன்
புரியா ஓவியங்களில்...
மெளனம் அசைபோடும்
வெறுமைப் பொழுதுகளை கழிக்க
நீ மரக்கன்றுகளை நடுகிறாய்
பறவைகள் அடைந்து பாடல்களால்
நிரப்பும் நாட்கள் வெகுதூரமில்லை...
சொந்தங்கள் வரைந்துபோன
மூளை கீறல்களை அன்பின்
சாயம்கொண்டு அழகுபடுத்துகிறாய்
ஓவியமாய் விரிகிறது..
தேசிய அவமானம் ஓங்கி ஓங்கி
ஒலிக்கிறது 33 சதவீதமாம்-முட்டாள்களே
சரி நிகரல்லவா நாங்கள்-மீசைகவி
இறந்து நாளாயிற்று...உன் முகம் வெளிப்படும்
பெண்ணிய நெடியில் கவிதைகளாய்..
காற்றின் திசைகளெங்கும்
நம்பிக்கையின் விதைகளை தூவிப்போகிறாய்
அவை பிரபஞ்சத்தை பூக்காடாய் மாற்றுகிறது...
திசைகளற்ற வெளியில் பறக்க முற்படும்
உன் பயணங்கள் சிறகுகளின் வலியை தந்தாலும்
விரிகிறதுன் வான்வெளி......












Click it and Unblock the Notifications