நைட்டோட நைட்டா காசை குறைச்சுட்டாங்கப்பா!
-ஏ.கே.கான்
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் ரூபாய் வேண்டுமானால் கொஞ்சம் தப்பலாம். ஆனால், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பதம் பார்க்கப் போவது நிச்சயம் என்பது தான் கவலை தரும் விஷயமாகும்.
ரூபாயின் மதிப்பை எப்படி உயர்த்தலாம்?.. அதற்கு தட்டுப்பாடு வரச் செய்தால் தான் தானே...
அதைத் தான் ரிசர்வ் வங்கி செய்துள்ளது. சந்தையில் ரூபாயின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளது.
எப்படி?..
1. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறைந்த கால கடனுதவிக்கான வட்டியை உயர்த்திவிட்டது. அதாவது, இரவோடு இரவாக ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக வாங்கி அடுத்த நாள் அதைத் திருப்பித் தரும் வசதி உண்டு. இந்தக் கடனுக்காக வட்டியை 2 சதவீதம் உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. (8.25 சதவீதத்திலிருந்து 10.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.)
2. மேலும் வங்கிகளுக்கு இரவோடு இரவாக தரப்படும் கடன் அளவை ரூ. 75,000 கோடியாகக் குறைத்துவிட்டது.
இதனால் ஏற்படும் பலன்:
இதனால் வங்கிகளிடம் ரூபாய்க்கு தட்டுப்பாடு ஏற்படும். இதன் காரணமாக சந்தையில் இருந்து பணத்தைத் திரட்ட வேண்டிய நிலைக்கு வங்கிகள் தள்ளப்படும். சந்தையில் வங்கிகள் நிதி திரட்டினால், அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவர். முதலீடு செய்யும் டாலருக்கு வங்கிகள் உத்தரவாதம் தரும் என்பதால் அதிக அளவிலான டாலர்கள் பங்குச் சந்தைக்கு வரும்.
அதிகமாக டாலர்கள் சந்தைக்கு வந்தால், அதற்கு இப்போது நிலவும் தட்டுப்பாடு விலகும். இதனால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.
3. மூன்றாவதாக, ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள மத்திய அரசின் ரூ. 12,000 கோடி மதிப்புள்ள பத்திரங்களை சந்தையில் விற்பனைக்கு விடவுள்ளது.
இதனால் ஏற்படும் பலன்:
அரசின் உத்தரவாதம் இருப்பதால் இதில் முதலீடு செய்ய தனியார் ஆர்வம் காட்டப் போவது நிச்சயம். அப்படி நடந்தால், சந்தையில் இப்போது புழக்கத்தில் உள்ள மேலும் ரூ. 12,000 கோடியை உறிஞ்சி எடுத்து பணப்புழக்கம் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். சந்தையில் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவது, ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்கும்.
தங்களது கரன்சிகளின் மதிப்பு மிகக் கடுமையாக சரிந்தபோது பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மேலே சொன்னதைத் தான் செய்து டாலர் தந்த அடியிலிருந்து கொஞ்சம் தப்பின.
ஆனால்... ரூபாயின் மதிப்பைக் காக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்துக்கு நிச்சயம் நல்லது செய்யப் போவதில்லை.
என்னென்ன கெடுதல்கள் வரும்?:
1. வங்கிகளின் வட்டி விகிதம் குறையப் போவதில்லை. வங்கிகளே தங்கள் தேவைக்கு அதிக வட்டிக்கு ரிசர்வ் வங்கியிடமும் பொதுச் சந்தையிலும் கடன் வாங்கும்போது, பொது மக்களுக்குத் தரும் கடனுக்கான வட்டியை ஏன் குறைக்கப் போகிறார்கள்?
இதனால் வீடு, பைக், கார் லோன், பர்சனல் லோனுக்கான வட்டிகள் இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை.
நல்லது என்ன?:
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவது மட்டுப்படும். இதனால் நமது இறக்குமதிக்காக செலவாகும் பணத்தின் அளவு குறையும். குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி. இதனால் பெட்ரோல், டீசல் விலையை வாராவாரம் ஏற்ற வேண்டிய நிலை வராது (ஆனால், பெட்ரோல் விலையை ஏற்ற வேறு ஏதாவது ஒரு காரணத்தை மத்திய பெட்ரோலிய நிறுவனங்கள் கண்டுபிடிக்காமலா போய்விடும்?!)
நடந்தது என்ன?:
ரிசர்வ் வங்கி நேற்று இரவோடு இரவாக செய்த இந்த மாற்றங்களால் ரூபாயின் மதிப்பு இன்று காலை கொஞ்சம் உயர்ந்து 59.13 என்ற நிலையை அடைந்துள்ளது. அதாவது கடந்த வாரம் ஒரு டாலருக்கு 61.21 என்ற நிலையை அடைந்த ரூபாயின் மதிப்பு உயர்ந்து இப்போது 59.13 ஆகியுள்ளது.