”லோக்சபா தேர்தலுக்கு மொத்தம் ரூ. 30,000 கோடி செலவாகும்”
டெல்லி: லோக்சபா தேர்தலை நடத்தி முடிக்க ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும் என ஒரு ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.
"ஜனநாயக திருவிழா" என்று அழைக்கப்படுகிற இந்திய லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது.
முதல் முறை:
சுதந்திர இந்திய வரலாற்றில் 9 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை.
தேர்தல் செலவினம்:
இந்த தேர்தல் செலவினம் குறித்து ஊடக கல்வி மையம் ஒரு ஆய்வு நடத்தியது. இது அரசுக்கு ஆகும் செலவு, அரசியல் கட்சிகளின் செலவு, வேட்பாளர்கள் செய்கிற செலவு என பல அம்சங்களையும் ஆராய்ந்தது.
மத்திய அரசு கஜானா:
அந்த ஆய்வின் முடிவில், 16 ஆவது பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கு மத்திய அரசின் கஜானாவுக்கு மட்டுமே சுமார் ரூ.7ஆயிரம் கோடி முதல் ரூ.8 ஆயிரம் கோடி வரை செலவாகும் என தெரிய வந்துளளது.
தேர்தல் கமிஷனுக்கு 3 ஆயிரம் கோடி:
இந்த தொகையில் ரூ.3 ஆயிரத்து 500 கோடியை தேர்தல் கமிஷன் செலவு செய்யும். மீதித் தொகையை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்திய ரெயில்வே, பிற அரசு துறைகள், மாநில அரசுகள் செலவு செய்யும்.
செலவின வரம்பு:
சமீபத்தில் வேட்பாளர்கள் செலவின வரம்பினை தேர்தல் கமிஷன் பரிந்துரைகளுக்கு ஏற்ப அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி குறைந்த பட்சம் ரூ.54 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம். எனவே இந்த செலவுகளையெல்லாம் கணக்கில் கொண்டால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும்.
வேட்பாளர்களின் செலவு:
543 தொகுதிகளில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் மட்டுமே ரூ.4 ஆயிரம் கோடி செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்ப்பரேட் வேட்பாளகள்:
இந்த ஆய்வு தகவல்களை ஊடக கல்வி மையத்தின் தலைவர் பாஸ்கரராவ் வெளியிட்டு பேசுகையில், ‘‘சமீப காலம் வரை அரசியல் கட்சிகள் அதிகளவு செலவு செய்து வந்தன. இப்போது அரசியல் கட்சிகளை விட வேட்பாளர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். கோடீசுவர வேட்பாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் பெருந்தொகை செலவிடுவர்'' என கூறினார்.