FACT CHECK - பாஜகவில் 35 பஞ்சாயத்து தலைவர்கள் இணைந்ததாக தெரிவித்த அண்ணாமலை - உண்மை என்ன?
சென்னை: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாஜகவில் இணைந்ததாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிக்கை அறிக்கை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதன் உண்மைத் தன்மை என்னவென்று விசாரித்தோம்.
கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பத்திரிகை செய்தி ஒன்று தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது.
"35 கடலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்" என்ற தலைப்பிடப்பட்டு அண்ணாமலையால் அந்த பத்திரிகை செய்தி கையெழுத்திடப்பட்டு இருந்தது.
அதில், "திமுக அரசின் அராஜக போக்கால், நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் எண்ணம் மற்றும் செயல்கள் மூலம் ஈர்க்கப்பட்டும், கமலாலயத்தில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவரு முன்னாள் எம்.எல்.ஏவுமான சோழன் பழனிசாமி அவர்கள் முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து கொண்டனர்.
அப்போ அண்ணாமலை? தமிழிசை கையெழுத்து எப்படி வந்தது? கொங்கில் ஏற்பட்ட குழப்பம்.. பதறிய காவிகள்!
ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு
04.07.2022 அன்று கடலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டிய கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர்கள் தீர்மானம் மூலம் நிறைவேற்ற முயன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் திமுக அரசின் கீழ் செயல்படும் அரசு இயந்திரங்களில் இருக்கும் கோளாறு, ஊழல் மற்றும் முறைகேடுகள் தான் காரணம்.
நிதி நெருக்கடி
மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தை செயல்படுவதில் சிக்கல்கள், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றங்களுக்கு 2021-22ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட வேண்டிய நிதி கூட விடுவிக்காததால் கடலூரில் அமைந்துள்ள பல ஊராட்சி மன்றங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன.
வாழ்த்துக்கள்
திமுக அரசு இவ்வூராட்சி மன்றங்களுக்கு அளிக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக பாஜக பக்கபலமாக இருக்கும். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வழியில் ஊழலற்ற நல்லாட்சியை உள்ளாட்சியில் அளித்திட பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கும் 35 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் எனது பரிபூரண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
மறுப்பு
ஆனால், பாஜகவில் சேர்ந்த 35 பஞ்சாயத்து தலைவர்கள் யார் என்ற பட்டியலை தமிழ்நாடு பாஜக இதுவரை வெளியிடவில்லை. அண்ணாமலை வெளியிட்ட இந்த அறிக்கை தவறானது என்றும், உண்மையாக இருந்தால் 35 பேரின் பெயர்களை வெளியிடாமல் இருப்பது ஏன் என்றும் பலர் கேள்வி எழுப்பினர். ஆனால், இதுகுறித்து கூடுதல் விளக்கங்கள் எதையும் தமிழ்நாடு பாஜக வெளியிடவில்லை.
உண்மை என்ன?
இதன் உண்மைத் தன்மை என்னவென்பது குறித்து ஒன் இந்தியா அறிய முயன்றது. இதுதொடர்பாக கடலூர் மாவட்ட அரசியல் வட்டாரங்களில் நாம் விசாரித்தோம். அப்போது தமிழ்நாடு அரசு ஊராட்சி மன்றங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கடலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாம்.
அண்ணாமலை சந்திப்பு ஏன்?
இதன் தீர்மானங்களை எடுத்துச் சென்று அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, இதுகுறித்து அறிக்கை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்க அவர்கள் முடிவு செய்து இருந்தார்களாம். அதன் அடிப்படையிலேயே இவர்கள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தார்கள் என்றும், பாஜகவில் அவர்கள் இணையவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4 பேர் மட்டுமே
அதுவும் அவர்கள் அண்ணாமலையை சந்தித்து கட்சியில் சேர்ந்ததாக பாஜக வெளியிட்டு இருக்கும் படத்தில் 4 பேர் மட்டுமே கடலூர் பஞ்சாயத்து தலைவர்கள் என்றும், அவர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக அண்ணாமலையை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. 4 பேர் மட்டுமே அண்ணாமலையை சந்தித்துள்ள நிலையில், 35 பஞ்சாயத்து தலைவர்கள் எப்படி பாஜகவில் இணைந்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
Fact Check
வெளியான செய்தி
35 கடலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர் என அண்ணாமலை அறிக்கை
முடிவு
4 பஞ்சாயத்து தலைவர்கள் கோரிக்கை விடுக்க மட்டுமே அண்ணாமலையை சந்திக்க சென்றதாக தகவல். 35 பெயர்களின் பட்டியலை பாஜக வெளியிடாததால் சந்தேகம் தொடர்கிறது.