நீத்தா அம்பானி முன்பாக குனிந்து கும்பிடு போடவில்லை மோடி.. உண்மையிலேயே கும்பிட்டது யாரை தெரியுமா?
டெல்லி: நீத்தா அம்பானி முன்பாக பிரதமர் நரேந்திர மோடி குனிந்து கும்பிடு போடுவது போன்ற ஒரு போலியாக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை, பிரசார் பாரதி அமைப்பின், முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி, ஜவஹர் சிர்கார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
தனது டுவிட்டர் பக்கத்தில், ஜவஹர் சிர்கார் இப்படி ஒரு படத்தை வெளியிட்டிருந்தார்.
மேலும் அந்த படத்திற்கு கருத்தும் கூறியிருந்தார். அதுவும் கண்டனம் தெரிவித்து இருந்தது அந்த கருத்து.
போலி படம்
இதோ ஜவஹர் சிர்கார் வெளியிட்ட கருத்து- சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலில் உள்ள மற்றவர்களும் மரியாதை தருவதும், திரும்ப பெறுவதும் இயல்பு. ஆனால் பிரதமரிடமிருந்து இப்படி ஒரு வணக்கம் வைக்கப்பட்டுள்ளது. ஒரு முதிர்ந்த ஜனநாயகத்தில், இரு வழி உறவு இருக்கிறது. உதவிகள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆகியவைதான் அவை. ஒரு நாள் நாள் இதை வரலாறு நமக்குத் தெரிவிக்கும். இவ்வாறு கூறியிருந்தார் அவர்.
உண்மையில் கும்பிட்டது யாரை
இந்த புகைப்படம் வைரலாக சுற்ற ஆரம்பித்த நிலையில், உண்மை என்ன என்று விசாரித்து பார்த்தால் விஷயம் வேறு. சமூக நலனுக்கான தொண்டு நிறுவனமான, திவ்ய ஜோதி கலாச்சார அமைப்பின் தலைவியான தீபிகா மொன்டலுடனான சந்திப்பின்போது, அவரின் சமூக சேவையை பாராட்டி குனிந்து கும்பிட்டுள்ளார் மோடி. அந்த புகைப்படத்தை, தொழிலதிபர் முகேஷ் அம்பானி மனைவி நீத்தாவை பார்த்து மோடி கும்பிடுகிறார் என்று ஜவஹர் தவறாக சித்தரிப்பு செய்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
பிரசார் பாரதி தலைவர் கண்டனம்
இதனிடையே, பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரி சசி சேகர், தனது டுவிட்டர் பக்கத்தில் ஜவஹரை கண்டித்துள்ளார். சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை இப்படி பொது வெளியில் பதிவு செய்தது அவமானகரமான செயல். வெட்கப்பட வேண்டிய செயல். அதுவும், பிரசார் பாரதியின் முன்னாள் தலைவரே இப்படிச் செய்துள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.
Fact Check
வெளியான செய்தி
கூறப்படுவது: நீத்தா அம்பானி முன்பாக மோடி குனிந்து கும்பிடுகிறார்
முடிவு
அந்த புகைப்படம் சித்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. என்ஜிஓ நடத்தி வரும் தீபிகா மொன்டல் முன்பாகத்தான் மோடி இவ்வாறு குனிந்து கும்பிட்டார்.