சட்ட மேலவை: நிறைவேறாத கருணாநிதி முயற்சிகள்..1989 முதல் 2011 வரை நடந்தது என்ன? கே.எஸ். ராதாகிருஷ்ணன்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலங்களில் 3 முறை சட்ட மேலவை அமைக்கும் முயற்சிகள் நடைபெற்றன; அந்த முயற்சிகள் என்ன? நிறைவேறாததன் பின்னணி என்ன என்பது குறித்து திமுக செய்தித் தொடர்பாளரான மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் விவரித்துள்ளார்.
கே.எஸ். ராதாகிருஷ்ணன் தமது சமூக வலைதளப் பக்கங்களில் இது தொடர்பாக எழுதி உள்ளதாவது:
இந்தியாவிலே மத்தியிலும் மாநிலங்களிலும் பூரண சுதந்திரம் மலர்ந்தது 1947 ஆகஸ்டுப் பதினைந்தில் ஆகும். ஆனால், இதற்கு முன்னோடியாக மாநிலங்களிலே அரைகுறையாகவேனும் சுயசியாட்சி மலர்ந்தது 1920 ஆகும்.
"மாண்டேகு - செம்ஸ்போர்டு திட்டம்" என்னும் பெயரால் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு வழங்கிய அரசியல் சீர்திருத்தத்தின் விளைவக அப்போதைய மெட்ராஸ்(சென்னை),பம்பாய்,கல்கத்தா(வங்காளம்) மாநிலங்களிலே சட்டமன்றத்தோடும் கூடிய சுயாட்சி மலர்ந்தது. உயர்நீதிமன்றங்கள் இந்தமூன்று இடங்களில் அமைந்தது.இவை மற்ற மாநில உயர்நீதி மன்றங்கள் விட அதிகாரம் பெற்ற Charter High courts.
LPA அதிகாரம் இவைகளுக்கு உண்டு. இதற்க்கு மேல் லண்டன் பிரிவு கவுன்சில்தான். அப்போது தமிழ் - தெலுங்கு - கன்னடம்- மலையாளம் ஆகிய நான்கு மொழிப் பிரதேச்ங்களைக் கொண்ட சென்னை ராஜ்யம் தனக்கென சட்டம்ன்றத்தையும் அமைச்சரவையும் பெற்றது. அந்த சட்டமன்றம் "லெஜிஸ்லேடிவ் கவுன்சில்" என்னும் ஆங்கிலப்பெயரால்அழைக்கப்பட்டது.
அதன் பின்னர்,"1935 என்னும் பெயரிலே பிரிட்டிஷ் பார்லிமெண்டால் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் வாய்லாக சென்னை - பம்பாய் - வங்காளம் ஆகியபலமான நிலங்களிலே இரண்டு அவைகளை உருவாக்கும் சட்டமானது 1937ல் நடை முறைக்கு வந்தது. பழைய லெஜிஸ் லேடிவ் கவுன்சிலானது, அந்தப் பெயராலேயே "மேலவை" யாக நீடித்தது."லெஜிஸ் லேடிவ் அசெம்பிளி" என்னும் பெயரிலே "சட்ட மன்றம்-கீழ் அவை" ஒன்றும் புதிதாகப் பிறந்தது!
1937ல் தொடங்கி 1986 அக்டோபர் வரை நமது மாநிலத்தில் இரண்டு அவைகள் இயங்கிவந்தன. ஆனால், தமிழக சட்டப் பேரவை 15-05-86ல் நிறைவேற்றிய தீர்மானப்படி, நாடாளுமன்றத்திலே சட்டமியற்றப்பட்டு, 31-10-86ல் தமிழக மேலவை கலைக்கப்பட்டது.
1920 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 66 ஆண்டுக் காலம் இயங்கி வந்த மேலவையின் தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்கள்:
பி.இராசகோபாலாச்சாரி 1920-23
எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை1924-25
எம்.ரத்தினசாமி1925-26
சி.வி.எஸ்.நரசிம்மராசு1946-30
பி.ராமச்சந்திர ரெட்டி 1930-37
டாக்டர் யு.ராமராவ் 1937-46
ஆர்.பி.ராமகிருஷ்ணராசு1946-52
டாக்டர் பி.வி.செரியன் 1952-64
சிந்தனைச் சிற்பி சி பி சிற்றரசு 1970-76
ம.பொ.சிவஞானம் 1978-86
இவர்களில் அதிக ஆண்டுகள் தலைமைப் பதவியில் இருந்தவர்கள் டாக்டர் பி.வி.செரியன், டாக்டர் ம.பொ.சிவஞானம் ஆகிய இருவருமாவர்.
துணைத்தலைவராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்து அடுத்து சுமார் 9 ஆண்டு காலம் தலைமைபதவியிலிருந்தார் ம.பொ.சி.
1945 முதல் 1954 வரை மேலவையின் உறுப்பினராகவும் துணைக் கொறடாவாகவும் ம.பொ.சி. இருந்தார். ஆக, கலைக்கப்பட்ட மேலவையுடன் ம.பொ.சி.க்கிருந்த தொடர்பு 17 ஆண்டு காலமாகும்.
மேலவை குறித்தான விவாதங்கள் நடக்கின்றன. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் 1989-லிருந்து மூன்று முறை தமிழகத்தில் மேலவை அமையவேண்டும் என்று, மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் நாடாளுமன்ற இரு அவையில் ஒப்புதல் பெறாமலேயே அந்த மூன்று தீர்மானங்களையும் அ.தி.மு.க அரசு, ஆட்சிக்கு வந்த பின் மூன்று முறையும் திரும்ப பெற்றன. இது ஒரு வேதனையான விடயம்.
1996-ல் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் கலைஞர் அவர்கள் இரண்டாவது முறையாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலுக்கு அனுப்பினார். இந்த காலக்கட்டத்தில் என்னை அழைத்து மேலவை அமையவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்ய என்னை கேட்டுக் கொண்டார். (அன்று மதிமுக செய்திதொடர்பாளர். திமுகவில் இல்லை. தோழமை கட்சி) பல பொதுநல வழக்குகள தாக்கல் செய்ய நீ மேலவை குறித்த தமிழக சட்ட மன்ற தீர்மானம் நடைமுறைக்கு வர வழக்கை தாக்கல் செய் என கோபாலபுரம் இல்லத்திற்க்கு அழைத்து கலைஞர் கூறினார்.
முதல்வர் கலைஞர் அறிவுறுத்தலின் பேரில் 06.03.2000-ல் தமிழகத்தில் மேலவை அமைய வேண்டும் என்று வழக்கும் தொடுத்தேன். அந்த வழக்கு எண்: WP No: 4399 of 2000. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும் சட்ட மேலவை அமையவேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தவும் செய்தது.
இந்த வழக்கில் எனக்காக ஆஜரான என் நண்பர்கள், வழக்கறிஞர்கள் என்.பால்வசந்தகுமார், டி.எஸ்.சிவஞானம் இருவரும் பத்தாண்டுகளுக்கு பின் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. என்.பால்.வசந்தகுமார் காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகி ஓய்வும் பெற்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை எடுத்துக்கொண்டு டில்லி சென்று இந்திய உள்த்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, சட்ட அமைச்சர் ஜெட்லியை அன்றைய மத்திய ராஜங்க அமைச்சர் செஞ்சி இராமசந்திரனுடன் (மதிமுக) சந்தித்தோம் பின் நாடாளுமன்றஇரு அவைகள் இதை விவாத்து ஒப்புதல் பெற பணிகள் நடந்தன. அன்று திமுக,மதிமுகபாஜக ஆட்சியில் இடம் பெற்றன.
கடந்த 2001 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்ட மன்றதேர்தல் அறிவிப்பு என ஆகிவிட்டது. உழைப்பு எல்லாம் வீன் ஆகிவிட்டது. என்ன செய்ய....
ஆனால் இன்று வரை 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தமிழகத்தில் மேலவை அமைய முடியாமல் ஆகிவிட்டது. மேற்கு வங்கத்தில் மேலவை அமைய, மேற்கு வங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை குறித்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை சந்தித்து மேலவை அங்கு அமையவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத்தில் தமிழகத்தில் மேலவை உறுப்பினர்கள் 78 பேர். உள்ளாட்சி அமைப்பில் இருந்து பிரதிநிதியாக இந்த அவைக்கு மூன்றில் ஒரு பங்கும், பட்டதாரி தொகுதியில் இருந்து 12 பேரும், ஆசிரியர் தொகுதியில் இருந்து 12 பேரும் மாநில ஆளுநர் நியமனத்தின் படி 6 பேரும் மீதியுள்ள இடங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
கடந்த 1989 கலைஞர் ஆட்சியில் மேலவை அமைய தீர்மானம் சட்டமன்றத்தில் 20.02.1989-ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 169 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இரண்டாவது முறையாக 1999-ல் கலைஞர் ஆட்சியில் திரும்பவும் 199 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு சட்ட மேலவை அமைய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.
இறுதியாக, மறுபடியும் கலைஞர் முதல்வராக இருந்த போது 12.04.2010, அன்று 155 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு மூன்றாவது முறையாகவும் சட்ட மேலவை அமைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மூன்று முறையும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அவசர அவசரமாக திரும்ப பெற்றார். அதில் காழ்புணர்ச்சியும் இருந்தது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் கலைஞர் 1989-ல் ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் மேல்சபையை அமைத்தார். அதே ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசு ஒப்புதலுக்கு சென்றது. ஆனாலும் ராஜ்யசபாவில் நிறைவேறிய தீர்மானம் லோக்சபாவில் நிறைவேறவில்லை. 1991-ல் தி.மு.க அரசு கலைக்கப்பட்டதால் முயற்சி வெற்றி பெறவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மேல்சபைக்கான தீர்மானத்தை ரத்து செய்தார். மறுபடியும் 1996-ல் தி.மு.க வெற்றி பெற்றப்பின் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டும் அது தோல்வியில் முடிவடைந்தது.
இதன் பின் 2006-ல் கலைஞர் ஆட்சி அமைந்ததும் 2010-ல் மீண்டும் மேல்சபைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அந்த தீர்மானம் சட்டமாக பார்லிமென்டின் இரு சபைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. அதற்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஆதரவே காரணம்.
இந்த காலகட்டத்தில் ஒரு நாள் மாலை பொழுதில் தலைவர் கலைஞர் என்னை அழைத்து மேலவை அமையபோகின்றது. மேலவை உறுப்பினராக நீ போட்டி போடவேண்டும். பட்டதாரி தொகுதியில் போட்டி போட உனக்கு சரியாக இருக்குமா அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் உன்னை தேர்ந்தெடுப்பது தான் சரியா என்று நீயே யோசித்து சொல் என்றார். நான் சரி என்று சொல்லிவிட்டு கோபாலபுரத்தில் உள்ள தலைவர் கலைஞர் அவர்களின் வீட்டின் கீழ் வந்து அமர்ந்தேன்.
அதே நாள் சகோதரி ராமநாதபுரம் பவானி ராஜேந்திரனை அழைத்து இந்த தேர்தலில் போட்டி இட வேண்டும் என்று கேட்டு கொண்டதையும் நான் அறிவேன். மேலவை உறுப்பினராக்கவேண்டிய பட்டியலில் முன்னால் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பெயரும் இருந்தது என் நினைவு. ஆனால் கலைஞரின் விருப்பத்தின் படி அது நிறைவேரவில்லை என்பது வருத்தமான செய்தி ஆகும்.
2010-ல் மேலவை தேர்தலுக்கான பணிகளும் ஆரம்பம் ஆகிவிட்டது. ஆனால் தி.மு.க வின் ஆட்சிகாலம் 2011-ல் முடிந்து. ஜனநாயகத்திற்க்கு விரோதமான காரியங்கள் செயக்கூடிய ஜெயலலிதா ஆட்சி வந்தபின் என்ன செய்ய முடியும். அதோடு மேலவை நம்பிக்கையான பேச்சு கூட மறைந்து விட்டது.
அப்போது மேல்சபை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கினாலும் 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசால் அந்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. தற்போது நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா உத்திர பிரதேச மாநிலங்களில் மட்டுமே மேல் அவைகள் உள்ளன. தமிழக மேலவை குறித்து அன்றைய முதல்வர் கலைஞர் அணிந்துரையுடன் 2010 இல் நான் எழுதிய நூல் வெளியானது. இதன் மறுபதிப்பு அடையாளம் திரு சாதிக் விரைவில் வெளியிடயுள்ளர்.
இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.