இதுதான் காங். கண்டுபிடிப்பு- A-ஆதர்ஷ் ஊழல்.. B- போபர்ஸ் ஊழல்.. C- காமன்வெல்த் ஊழல்..: மோடி 'பொளேர்'
ஜெய்ப்பூர்: ஊழல்களின் அடிப்படையில்தான் ஆங்கில எழுத்து வரிசையை படிக்க வேண்டும் என காங்கிரஸ் புது கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறது.. அதாவது A-ஆதர்ஷ் ஊழல்.. B- போபர்ஸ் ஊழல்.. C- காமன்வெல்த் ஊழல்" என்றுதான் இனி மாணவர்கள் படிக்க வேண்டியது இருக்கும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், முன்னாள் முதல்வர் வசுந்தரராஜேவின் யாத்திரையால் பாரதிய ஜனதா கட்சி இம்மாநிலத்தில் வலுவடைந்துள்ளது. ராஜஸ்தான் மக்கள் 5 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தலின் போது தவறு செய்துவிட்டதாக கூறுகின்றனர். கடந்த தேர்தலில் தாங்கள் செய்த அந்த தவறுக்கு பிராயசித்தம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளனர்.

பிரதமர் மன்மோகன்சிங்கோ, ராகுல் காந்தியின் கீழே பணிபுரிய தயார் என்கிறார். மன்மோகன்சிங் அரசு எப்படிப்பட்ட அரசாக இருக்கிறது? எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க முடியாத அரசாக இருக்கிறது. எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள இயலாத அரசாக இருக்கிறது. இந்த அரசாங்கத்திடம் எந்த ஒரு பதிலுமே கிடைப்பதும் இல்லை.
அண்மையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் எந்த பிரச்சனையைப் பற்றி பேசினார்? காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது 1947க்கு முன்பு இருந்தது வேறு, 1947க்குப் பிந்தைய காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் மீதும் பக்தி கொண்டதாக இருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ பாரதத்தின் மீதான பக்தியோடு 125 கோடி மக்களுக்கான கட்சியாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஊழல் என்பது அதன் ஒரு பகுதி. ஒரு நபர் காங்கிரஸிலேயே நீண்டகாலம் நீடிப்பார் எனில் அவர் மிக மோசமான ஊழல்வாதியாக இருப்பார். காங்கிரஸை வைத்துக் கொண்டு நாம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கிவிட முடியாது. ஊழலற்ற இந்தியாவை உருவாக்க சிறந்த மருந்து காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவது என்பதுதான்.
காங்கிரஸ் கட்சி எதிர்கால மாணவர்களுக்கு ஆங்கில அகரவரிசையை எப்படிப் படிப்பது என்று புதிய முறையையே கண்டுபிடித்துள்ளது. அதாவது A-ஆதர்ஷ் ஊழல்.. B- போபர்ஸ் ஊழல்.. C- காமன்வெல்த் ஊழல்.. என்றுதான் இனி மாணவர்கள் படிக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி இளைஞர்களை வாக்கு வங்கியாகவே பார்க்கிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ மகத்தான சக்தியாக பார்க்கிறது. அவர்கள் ஆக்கப்பூர்வமாக வாக்காளர்களாக மாற வேண்டும்,
நாட்டு மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். காங்கிரஸுக்கு எதிரான அலை வீசுகிறது. இளைஞர்களின் கோபத்தில் காங்கிரஸ் ஆட்சி தூக்கி எறியப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications