மு.கா.முத்துராமன் என்கிற கார்த்திக்!
சென்னை: முரளி கார்த்திகேயன் முத்துராமன் என்றால் யாருக்குமே புரியாது. நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக்கின் முழுப் பெயர் இதுதான்.
நடிகராக இவரது இடத்தை இதுவரை யாருமே பிடிக்கவில்லை. இன்னும் அப்படியே அந்த சிம்மாசனம் கம்பீரமாக காத்திருக்கிறது..தனது அடுத்த வாரிசைக் காண.
ஆனால் ஒரு அரசியல்வாதியாக நிச்சயம் கார்த்திக் இன்னும் வெற்றி பெறவில்லை. ஆரம்பத்தில் தனக்குக் கூடிய கூட்டத்தை மட்டும் நம்பி தப்புக் கணக்குப்போட்டு, தடம் மாறி இன்று அடையாளம் இல்லாமல் இருக்கிறார் கார்த்திக்.

முத்துராமன் மகன் கார்த்திக்
மறைந்த நடிகர் முத்துராமனின் மகன்தான் கார்த்திக். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் முரளி கார்த்திகேயன். சினிமாவுக்காக கார்த்திக் என்று மாறினார். அலைகள் ஓய்வதில்லை மூலம் தமிழ் சினிமாவைக் கலக்க வந்த காதல் நாயகன் இவர்.
பி.ஏ. படிப்பு
சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ படித்தவர் கார்த்திக். முத்துராமனிந் நான்காவது மகன், கடைசி மகனும் கூட. பாரதிராஜா மூலமாக நடிகராக களம் இறக்கப்பட்டார் கார்த்திக்.

இயக்குநர்களின் டார்லிங்
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களின் படங்களில் நடித்த பெருமைக்குரியவர் கார்த்திக். கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்தினம், பி.வாசு, சுந்தர்.சி, பிரியதர்ஷன், கே.வி.ஆனந்த், ஆர்.வி.உதயக்குமார், பாசில் என லிஸ்ட் பெரியது.
காமெடியும் காதலும்
இவரது படங்களில் காமெடியும், காதலும் சற்று தூக்கலாகவே இருக்கும். ஆக்ஷன் அதிரடியிலும்கூட காமெடியைக் கலந்துதான் கலக்குவார் கார்த்திக்.
பேச்சு ஸ்டைல்
கார்த்திக்கின் பேச்சு ஸ்டைலுக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. மிமிக்ரி கலைஞர்கள் பலருக்கும் இவரது குரல் தெய்வம் போல. இவரது குரலை பேசாத மிமிக்ரி கலைஞர்களே இருக்க முடியாது.
சரணாலயம்
நடிப்பில் பிரபலமாக இருந்து வந்த நிலையில் சரணாலயம் என்ற அமைப்பைத் தொடங்கினார் கார்த்திக். அந்த அமைப்புக்கு தென் மாவட்டங்களில் பெரும் கூட்டம் கூடியது. அந்தக் கூட்டம் பலரையும் வியப்புக்குள்ளாக்கியது.

அரசியல் பிரவேசம்
இந்தக்கூட்டத்தைப் பார்த்து மெய் மறந்த கார்த்திக்,அரசியலுக்குள் புகுந்தார். ஆனால் தனிக் கட்சி காணாமல் தனக்குக் கூடிய கூட்டத்தை சரிவர பயன்படுத்தாமல் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் போய் இணைந்தார்.
2006ல் அரசியல்
2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் நுழைந்தார் கார்த்திக். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழகப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2009ல் தனிக்கட்சி
இந்த நிலையில் பார்வர்ட் பிளாக் கட்சியை விட்டு 2009 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக விலகிய கார்த்திக், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார்.
விருதுநகரில் பறிபோன டெபாசிட்
அந்தத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டார். வெறும் 15,000 ஓட்டுக்களை மட்டுமே வாங்கினார். டெபாசிட்டைப் பறி கொடுத்தார்.
2011 தேர்தலில்
2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. ஆதரவு மட்டும் கொடுங்க, டிக்கெட் தரமுடியாது என்று ஜெயலலிதா கூறியதால் கடுப்பாகி கூட்டணியில் சேரும் முடிவைக் கைவிட்டார்.
வீணாகிப் போன சக்தி
உண்மையில் இன்றளவும் கூட கார்த்திக்குக்கு தென் மாவட்டங்களில் ஒரு தனி கூட்டமே உள்ளது. ஆனால் பார்ட் டைம் அரசியல்வாதியாகவும், ஏசி வேனில் மட்டுமே வலம் வரும் அரசியல்வாதியாகவும் கார்த்திக் இருப்பதால் இந்த சக்தி வீணாகி விட்டது. ஆனாலும் இன்னும் பலர் கார்த்திக்கை நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் ஆச்சரியமே.
2016 தேர்தலில்
2016 சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளார் கார்த்திக். ஆனால் திமுக கூட்டணியிலோ இவரை இப்போதைக்கு யாரும் வரவேற்பதாகக் கூட தெரியவில்லை.
தமிழக அரசியல் களம் கண்ட விசித்திரத் தலைவர்களில் கார்த்திக்கும் ஒருவர்.












Click it and Unblock the Notifications