உங்க வீட்டு கரித்துணியோட மதிப்பு ரூ.1290யாக்கும்.. நீங்க நம்பலைனாலும் அதுதான் நிஜம்!
சாதம் வடிக்கும்போது முட்டுக் கொடுக்க பயன்படும் கருவியின் புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
சென்னை: காலம் காலமாக சாதம் வடிப்பதற்கு முட்டு கொடுக்கும் கரித்துணிக்குப் பதிலாக, ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் புதிய கருவி ஒன்று நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்களின் தேவைக்கு ஏற்ப கருவிகளைக் கண்டுபிடித்து அதனை விற்பனைக்கு கொண்டு வருவது வியாபாரத் தந்திரங்களில் ஒன்று. நம் வேலையை எளிமையாக்கும் என்பதால் மக்களும் யோசிக்காமல் அதனை வாங்கி விடுவார்கள். இதனாலேயே சந்தையில் நாளுக்குநாள் விதவிதமான பொருட்கள் விற்பனைக்கு அறிமுகமாகின்றன.
அதில், 'அடடா இப்படி ஒரு பொருள் இருந்தால் நன்றாக இருக்குமே..' என சில பொருட்கள் நாம் தேடியவையாக இருக்கும். மற்றவைகளோ, 'நீ பிடுங்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிதான்..' என்ற ரகத்தைச் சேர்ந்தவை. அதுவும் நாம் அப்படி நினைக்க முக்கியக் காரணம் அதன் விலையும்தான்.
“5 கட்சி மாறிய செந்தில் பாலாஜி சொன்னது உண்மைதான்.. எனக்கு பக்குவம் போதாது” - அண்ணாமலை பதிலடி!
இப்போது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கும் கருவியும் அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான். சாதம் வடிப்பதற்கு கரித்துணிக்குப் பதில், முட்டுக் கொடுப்பதற்கு இந்தக் கருவி உதவுகிறது. ரைஸ் டிரெய்னர் எனக் குறிப்பிட்டு அமேசானில் இது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ஜஸ்ட் ரூ. 1290 மட்டுமே (தள்ளுபடி போகத்தான் இந்த விலை பாஸ்... தள்ளுபடி இல்லாமல் ரூ. 1990..)
குக்கர் பொங்கல்
தென்னிந்தியர்களின் பிரதான உணவு அரிசி சாதம்தான். நம் முன்னோர்கள் விறகு அடுப்பில் அரிசி சாதத்தை வேகவைத்து வடிகட்டி சாப்பிட்டார்கள். கடந்த பத்து, இருபது ஆண்டுகளாக நேரத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்து, குக்கர்களுக்கு மாறின நம் அடுப்படிகள். வாசல் பொங்கல்கூட சில நகரங்களில் குக்கர் பொங்கலாக மாறி விட்டது.
பழமைக்கு திரும்பிய வாழ்க்கை
ஆனால் சமீபகாலமாக புதிது புதிதாக உருவாகி வரும் நோய்கள் தந்த அச்சத்தால், மீண்டும் ஆர்கானிக் பக்கம் நம் கவனம் திரும்பத் தொடங்கியிருக்கிறது. இதனால் மீண்டும் பல வீடுகளில் அரிசியை வடித்துச் சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். நேரம் அதிகம் என்றாலும், அதுதான் ஆரோக்கியம் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதெல்லாம் ஒரு கலை
குழைந்து விடாமல் அரிசியை பக்குவமாக சாதமாக வேகவைப்பது ஒரு கலையென்றால், அதிலிருக்கும் கஞ்சியை கை, காலில் கொட்டிக் கொள்ளாமல் வடிகட்டுவது அதைவிட பெரிய சாகசம். சோறு பொங்கும் பானைக்கேற்ற சரியான பாத்திரத்தை தேர்ந்தெடுத்து, சரியான மூடி போட்டு அதனை பார்த்து, சிந்தாமல் சிதறாமல் வடிகட்ட வேண்டும்.
ஆபத்பாண்டவனாகும் கரித்துணி
சாதப் பானையில் இருக்கும் கடைசி சொட்டு கஞ்சி வரை வெளியேற்றினால்தான் சாதம் உதிரி உதிரியாக அழகாக இருக்கும். ஆனால் அவ்வளவு நேரம் அந்தப் பானையைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தால், நம் முதுகு நம்மை வலியில் பிடித்துக் கொள்ளும். அப்போது ஆபத்பாண்டவனாக நமக்குக் கை கொடுப்பதுதான் கரித்துணி.
கரித்துணியின் அவசியம்
கரித்துணியை சாதப் பானைக்கு முட்டுக் கொடுத்து விட்டால், ஹாயாக அரை மணி நேரம் கழித்துக்கூட நாம் வந்து மீண்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ளலாம். பானையில் இருந்து குக்கருக்கு மாறிய வீடுகளில்கூட இன்னமும் கரித்துணியை ஒழிக்க முடியவில்லை. அந்தளவுக்கு அடுப்படியில் கரித்துணியும், அஞ்சறைப்பெட்டி மாதிரி முக்கியமான பொருள்.
மீம்ஸ் போட்டு கலாய்
இப்போது அந்தக் கரித்துணிக்கு மாற்றாகத்தான் இந்தக் கருவியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். சமீபத்தில் அமேசானில் பிளாஸ்டிக் பக்கெட் ஒன்று ரூ. 26000க்கு விற்பனை செய்யப்பட்டதாக ஒரு செய்தி வைரலானது. அதேபோல், தற்போது இந்த அரிசி வடிக்கும் கருவியும் சமூகவலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. இதைக் கலாய்த்து மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.