10,12 வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம் - டவுன்லோடு செய்வது எப்படி?
சென்னை : தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல், தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர்.
துணைத் தேர்வு
இதைத்தொடர்ந்து,10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 24ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், தேர்ச்சி பெறாதவர்களுக்காக 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27-ல் தொடங்கும் என்றும் 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ல் தொடங்கும் எனவும் அற்விக்கப்பட்டது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
இந்நிலையில்,10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளிகள் வாயிலாக இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி, பதிவு எண் விவரத்தை அளித்து இந்த இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டல்
மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு நேற்று முன்தினம் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 29-ஆம் தேதி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பயப்பட வேண்டாம்... கருணை மதிப்பெண் உண்டு - மாணவர்களை கூல் செய்த அன்பில் மகேஷ்