வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விடுதலைப்புலிகளுக்கு கனடா தமிழர்கள் நிதியுதவி செய்வதாக போலீஸ் புகார்
டொரன்டோ:
கனடாவின் டொரன்டோ மற்றும் மான்ட்ரீல் நகரங்களில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் தமிழர்கள், அதை இலங்கையில் தனி நாடு கோரி போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கி வருவதாக கனடா போலீஸ் குற்றம்சாட்டியுள்ளது.
போதைப் பொருள் விற்பனை, திருட்டுக்கள், வங்கிகளில் மோசடி, சூதாட்ட கிளப்களில் மோசடி செய்வதன் மூலம் இந்தப் பணம் ஈட்டப்படுவதாக போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு கனடா போலீஸாருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியிடப்படவில்லை. செளத்தாம் நியூஸ் என்ற பத்திரிகை விதிமுறைப்படி, இந்த அறிக்கையை கோரிப் பெற்று வெளியிட்டுள்ளது.
அந்த செய்தி விவரம்:
விடுதலைப் புலிகளுக்குப் பணம் வழங்குவது குறித்து கனடா புலனாய்வுத் துறைக்கு இதுதொடர்பாக உறதியான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. சட்டவிரோதமான முறையில் ஈட்டப்படும் பணத்தை விடுதலைப் புலிகளுக்கு தமிழர்கள் வழங்கி வருகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இவர்களுக்கும் இடையே நல்ல தொடர்பு உள்ளது.
தங்கள் தாய்நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் இந்த செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது என்ற உறுதியாகத் தெரியவில்லை.
கனடாவில் வசிக்கும் சில பணக்காரத் தமிழர்களை மிரட்டியும், கடத்தியும் கூட இவர்கள் பணம் பெற்று இலங்கைக்கு அனுப்புகின்றனர் என்று செய்தியில் வெளியிடப்பட்டிருந்தது.
தமிழர் அமைப்பு மறுப்பு
கனடா போலீஸாரின் அறிக்கையை டொரன்டோவாழ் கனடா தமிழர்களின் சம்மேளனம் மறுத்துள்ளது. அமைப்பின் செய்தித் தொடர்பாள் நேரு குணரத்தினம் கூறுகையில், போலீஸாரி அறிக்கையில் கொஞ்சமும் உண்மையில்லை. கனடா போலீஸாரின் அறிக்கையால் இந்த நாட்டில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் மனம் புண்பட்டுள்ளது.
தமிழர்கள் இனப் பற்றுள்ளவர்கள். எனவே அவர்களில் ஒருவரை அவர்கள் கடத்திச் சென்று பணம் பறிக்கிறார்கள் என்றால் நம்ப முடியவில்லை. இதற்கானஆதாரம் போலீஸாரிடம் உள்ளதா?. பிற நாடுகளில் உள்ளது போலவே, கனடாவிலும் குற்றவாளிகள் உள்ளனர். இவர்களுக்கும் கனடாவில் வசிக்கும் அல்லது பிற இடங்களில் உள்ள தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் அவர்.
தமிழர்கள் அமைதி விரும்பிகள்: இலங்கை தூதர்
கனடா வாழ் தமிழர்களில் சிலர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவுவது குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக கனடா அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக கனடாவில் உள்ள இலங்கைக்கான தூதர் அனந்த குணசேகரா தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கனடா நிர்வாகத்துடன் நாங்கள் பேசி வருகிறோம். நீண்ட நாட்களாக இதுகுறித்து அரசு திட்டமிட்டு வருகிறது.
கனடாவில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. அவர்கள் அனைவரும் அமைதி விரும்பிகள். ஆனால் இதுபோன்ற நன்கொடை வழங்குவற்கு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
கனடாவில் மட்டுமல்லாது, பாங்காக் நகரிலும் இதுபோனற நபர்கள் உள்ளனர். அதுகுறித்தும் இலங்கை அரசு யோசித்து வருகிறது என்றார்.
கனடாவில் உத்தேசமாக 2 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.