தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் விடுதலையில் தாமதம் ஏற்படுவதால், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, பெங்களூர் உள்படகர்நாடகத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் மடியால் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக மூன்று முறை காட்டுக்குச்சென்று வீரப்பனைச் சந்தித்து விட்டுத் திரும்பியுள்ளார் அரசுத்தூதர் கோபால். ராஜ்குமாருடன் அவர் திரும்பாததால் பெங்களூரில் புதன்கிழமை பதட்டம்ஏற்பட்டது.
பெங்களூரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள்அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 20 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படை, ஆர்.ஏ.எஃப் மற்றும் சி.ஆர்.பி.எஃப் போலீஸார், 90 கம்பெனி கூடுதல்ரோந்துப் போலீஸார், 5000 நகரப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் இதுவரை 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள மாநில ஆயுதப்படை போலீஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன. பெங்களூர் தவிர மைசூர், மண்டியா,சாம்ராஜ்நகர் பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் மடியால்.
புதன்கிழமை அதிகாலை பெங்களூர் நகரிலும், ராஜ்குமாரின் சொந்த ஊரான காஜனூரிலும் அரசுத்தூதர் கோபால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றவதந்தி பரவியது. இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது அவர்கள் அதை மறுத்தனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினர்.