இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை
கேள்வி - பதில்
கே: ஒன்றும் தெரியாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இந்த நாட்டையே கெடுத்து விட்டார்கள் என்கிறாரே டாக்டர் ராமதாஸ் ...?
ப: இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இல்லையென்றால், இந்நாட்டு நிர்வாகமே பெரும் குளறுபடியாகப் போயிருக்கும்: மத, ஜாதி விரோதங்கள் தலை விரித்துஆடியிருக்கும்: சட்டத்திற்கு சற்றும் மரியாதை இல்லாமற் போயிருக்கும்.
அதிகார வர்க்கத்திடம் ஆயிரம் குறை உண்டு: ஆனால் அவற்றை மீறிய திறனும், அவர்களிடம் உண்டு.
கே: நான் செய்த ஒரே தவறு- ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு நண்பராக இருந்ததுதான் என்று போஃபார்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளகுட்ரோச்சி கூறியிருப்பது பற்றி ...?
ப: இவர் குடும்ப நண்பரே அல்ல என்று யாரோ சொன்ன மாதிரி ஞாபகம். இப்போது நண்பர்தான் - என்று அவர் சொல்கிறார். இது முதல்படியா?
கே; ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நடத்திய இஃப்தார் விருந்தில், முன்னாள் கிரிக்கெட் காப்டன் அசாருதீன் கலந்து கொண்டது பற்றி தங்கள்கருத்து ...?
ப: என்ன பெரிய தவறு நடந்து விட்டது என்று இப்படி அமர்க்களம் செய்யப்படுகிறது என்றே எனக்குப் புரியவில்லை. சாதாரண ஒரு விஷயம்பெரிதுபடுத்தப்படுகிறது. அரசு அழைப்பிதழ்கள், பட்டியல்படி போய்ச் சேருபவை: இதில் பெரிய உள் நோக்கங்கள் இருக்க முடியாது.
கே: சென்ற தேர்தலில் நீங்கள் சொன்னதைக் கேட்டுத்தான் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டேன். ஆனால் இந்தத் தடவை அ.தி.மு.க.வுக்கு ஓட்டளியுங்கள்என்று கூறுவீர்கள் போல் தெரிகிறதே! இது சரியா இருக்குமா?
ப: நான் அப்படிச் சொன்னால் - அதற்கு நான் கூறக்கூடிய காரணங்களை கவனித்து - நான் அப்படிச் சொல்வது சரியா என்று தீர்மானிக்கப் போவதுநீங்கள்தானே? உங்கள் தீர்ப்பு பற்றி, உங்களுக்கே சந்தேகம் வரலாமா?
கே: மம்தா பானர்ஜி லிஸ்டில் தெலுங்கு தேசமும் சேர்ந்துவிடும் போலுள்ளதே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ...?
ப: சந்திரபாபு நாயுடுவுக்கு, பிரதமர் பதவி மீது கூட ஒரு கண் இருக்கலாம். ஆனால் அவர் அவசரப்படுவதில்லை.
பா.ஜ.க. அரசு இப்போது ஆட்டம் காண்பதில் அவருக்கு எந்த பயனும் இல்லை. காங்கிரசுடன் ஒத்துழைக்க, ஆந்திர அரசு அவரை அனுமதிக்காது.ஆகையால் சப்தத்தைக் கிளப்பி, சில காரியங்களை சாதித்துக் கொள்வாரே தவிர - பெரும் சங்கடத்தைத் தோற்றுவிக்க மாட்டார்.
கே: முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது என்று பால்தாக்கரே மீண்டும் மீண்டும் கூறி வருவது பற்றி ...?
ப: தான் அவ்வாறு பேசவில்லை என்றும், முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை இல்லையென்றால், இன்று அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிற பலகட்சிகள், என்ன செய்யும்? என்றே தான் குறிப்பிட்டதாகவும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.
மாறாக, முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை அளிக்கக் கூடாது என்று அவர் கூறியிருந்தால் - அது மிகவும் கண்டிக்கத்தக்கது: துவேஷத்தைப் பரப்புகிறகீழ்த்தரமான பேச்சு.
கே: ஸ்டாலின் மேயராக, இந்திரா காந்திதான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி மேடைதோறும் கூறி வருவது பற்றி ...?
ப: பெருமையை பகிர்ந்து அளிக்கிறாரா, அல்லது பழியைத் தூக்கிப் போடுகிறாரா என்பது புரியவில்லை.
கே: நாம் உச்சரிக்கும் ஒலியைப் பொறுத்துதான் கடவுள் கிருபை செய்வான் என்றால், அவர் என்ன கடவுள்?
ப: அந்த ஒலியைக் கூட ஒழுங்காகச் செய்ய முயல மாட்டோம் என்றால், நாம் என்ன பக்தர்கள்.
கே: தாமரைக்கனி விவகாரத்தின் மூலம் உ.யர் நீதிமன்றம், சட்டமன்றம் - இவற்றின் அதிகாரங்கள் குறித்த சர்ச்சை திரும்பவும் எழுந்திருப்பதுபற்றி ...?
ப: சட்ட சபையின் அதிகாரத்தில் குறுக்கிட இந்த நீதிமன்றத் தீர்ப்பு முயலவில்லை. சட்ட சபையில் அதிகாரம், சபாநாயகருக்கே வந்துவிடாது என்றுதான்கூறியிருக்கிறது.
சட்டசபை தீர்மானம் மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, சபாநாயகரின் உத்தரவு மூலம் எடுக்கப்பட முடியாது - என்றுதான் நீதிமன்றம் கூறியது.
இதற்கு இவ்வளவு சர்ச்சை தேவையில்லை.
கே: நீங்கள் எதிர்பார்த்தது போலவே, மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவில்லையே?உமக்கு திருப்திதானே?
ப: மீண்டும் வருமே? ஜலதோஷம் மாதிரி அல்லவா இது ஆகிவிட்டது! போயே போச்சு - என்ற நிம்மதி ஏற்படுவதற்குள், தும்மல், மூக்கடைப்பு,காய்ச்சல் - என்று ஆரம்பித்து விடுகிறதே. அதனால் திருப்திக்கு இடமில்லை. கொஞ்சம் ஆறுதல் அவ்வளவுதான்.
கே: பட்டது போதும் பெண்ணாலே என்கிறாரே இல.கணேசன்?
ப: இப்படித்தான் ஒருவர் கூறி, சந்நியாசம் பெற முடிவெடுத்தார். வீட்டை விட்டு வெளியே போனார். தயங்கி நின்றார். திரும்பி வந்தார்.
மாடத்தில் சுண்ணாம்பு டப்பி இருக்கிறது: அதை வேறு எங்கும் தேடிக் கொண்டிருக்காதே. அதைச் சொல்லத்தான் வந்தேன் என்று சொல்லிவிட்டுஅங்கேயே இருந்து விட்டார். சந்நியாசம் முடிந்தது. இந்தக் கதை பா.ஜ.க.பற்றியது அல்ல. சந்நியாசம் பற்றியதுதான்.
கே: தங்களை ஜெயலலிதா சந்தித்ததற்கு இவ்வளவு பரபரப்பும், முக்கியத்துவமும் பத்திரிக்கையில் கிடைத்திருப்பது பற்றி ...?
ப: ராஜ்குமாரின் விவகாரம் ஓய்ந்த பிறகு, பரபரப்பு பசி பத்திரிக்கைகளை வாட்டிக் கொண்டிருந்தது. அப்போது இந்த அவல் கிடைத்தது. மெல்லத்தொடங்கி விட்டது பத்திரிக்கை உலகம் அவ்வளவுதான்.
கே: அசாருதீன், ஜடேஜா, மனோஜ் பிரபாகர் - ஆகியோருக்கு அளிக்கப்பட்ட அரஜுனா விருதுகளைப் பறிக்க, அரசு ஆராய்ந்து வருவதாக அமைச்சர்உமா பாரதி தெரிவித்துள்ளாரே?
ப: இவ்வளவு அவசரப்படத் தேவையில்லை. விசாரணை முடிவு வந்திருக்கிறது. கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இவை நீதிமன்ற தீர்ப்பு ஆகிவிடாது. இந் நிலையில், விருது பறிப்பு சரியாக இருக்காது - என்பது என் கருத்து.