ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் மகர ஜோதி
சபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரிசனம் தரும் மகரஜோதி விழா ஜனவரி மாதம் 14-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடை பெறுகிறது.
கார்த்திகை மாதம் முதல் தேதி மாலையணிந்து 41 நாட்கள் விரதமிருந்து சபரிமலை செல்வார்கள். மண்டல பூஜை விழா டிசம்பர் மாதம் நிறைவுற்றது.அதன் பின் சன்னதி நடை மூடப்பட்டது.
மகர ஜோதி விழாவுக்காக நடை இந்த மாதம் 1-ம் தேதி திறக்கப்பட்டது. சுவாமி ஐயப்பன் ஜனவரி மாதம் 14-ம் தேதி பக்தர்களுக்கு ஜோதிவடிவாக காட்சியளிப்பார். இந்த மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் ஏராளமான அளவில் குவிந்திருக்கின்றனர்.
சபரிமலையில் 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்க வேண்டும். இந்த 18 படிகளுக்கென ஒரு தத்துவம் உண்டு.
ஐம்புலன்கள் 5: மெய், வாய், கண், மூக்கு, காது.
திரிகுணங்கள் 3: சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம்.
வித்ய, அவித்ய இரண்டு.
அஷ்ட ராகங்கள் 8: வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், ருத்திரம், நகை.
இந்த பதினெட்டுமே, 18 படிகளின் தத்துவம். இவற்றை கடந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும். ஒருவர் 18 ஆண்டுகள் சபரிமலை சென்று 18 படிகளை கடந்துசென்று வந்தால் அவர் பிறப்பு, இறப்பிலிருந்து விடுபடுகிறார். அவர் சொர்க்கத்தை அடைவார்கள் என்பது 18 படிகளின் தத்துவமாகும்.
மகரஜோதி வைபவத்தையொட்டி ஐயப்பனுக்கு அணியப்படவிருக்கும் திரு ஆபரணப்பெட்டி பந்தளத்திலிருந்து சபரிமலைக்கு வெள்ளிக்கிழமை பந்தளத்திலிருந்துஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த திருஆபரணப்பெடி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சபரிமலையை வந்தடையும்.
திருஆபரணப்பெட்டி ஊர்வலத்திற்கு தயாரானவுடன் கருடன் அந்த பகுதியில் வட்டமிட்டது. அது கண்ட பக்தர்கள் ஸ்வாமியே சரணம் ஐயப்பா என சரணகோஷமிட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை திருஆபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தீபாரதனையும் நடைபெறும்.
சிறிது நேரம் கழித்து கருடன் விண்ணை வட்டமிட ஆரம்பிக்கும்.அது விரைவில் சபரிமலை வாசன், அருட்கடல், தர்ம சாஸ்தா, கேட்டதைக் கொடுக்கும்வள்ளல், புலி வாகனன், ஐயப்பன் ஜோதி வடிவாக தன் பக்த கோடிகளுக்கு தரிசனம் தரப்போகிறான் என்பதற்கு கட்டியம் கூறுவது போலாகும்.
கருடனை கண்டதும் பக்தர்கள் மகர ஜோதியைகாண பக்தியுடன் தயாராகி விடுவர். அனைவர் கண்களும் பொன்னம்பல மேட்டிலேயே நிலைத்திருக்கும்.
பொன்னம்பல மேட்டில் இருக்கும் மூன்று சிறு பள்ளங்களில் ஜோதி தெரியும். இந்த மூன்று பள்ளங்களுக்கும் இடையில் சிறு இடைவெளி இருக்கும்.
கருடன் வட்டமிட தொடங்கிய சில நிமிட நேரங்களில் மகரஜோதி பொன்னம்பல மேட்டில் இருக்கும் முதல் பள்ளத்தில் தோன்றும், ஜோதி கண்டதும்பக்தர்கள் கைகளை உயரக் கூப்பி சுவாமியே சரணம் ஐயப்பா என எழுப்பும் சரண கோஷ விண்ணையே அதிர வைக்கும்.
முதல் பள்ளத்தில் சிறிது நேரம். அங்கிருந்து மறைந்து இரண்டாவது பள்ளத்திற்கு. அதன் பின் மூன்றாவது பள்ளத்திற்கு பின் ஜோதி மறையும். விரதமிருந்துஜோதிவடிவான சபரிமலைவாசனை தரிசித்த பக்தர்கள் அங்கிருந்து மலை இறங்கி வீடு திரும்ப தொடங்குவார்கள்.
ஜோதி பொன்னம்பல மேட்டில் தோன்றும் போது சபரிமலை ஐயப்பனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெறும்.
கேட்டதைக் கொடுக்கும் அருட்கடலை நாமும் பிரார்த்தித்து அவன் அருள் பெறுவோம்.