சத்துணவு அரிசியை பதுக்கி வைத்த நால்வர் கூட்டணி
அயோத்திப்பட்டிணம்(சேலம்):
சத்துணவு அரிசியை பதுக்கி வைத்திருந்த நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.
சேலம், அயோத்திப்பட்டணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சத்துணவு அரிசி மூட்டைகள் பதுக்கிவைத்திருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த ஹோட்டலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியண்ணன், எஸ்.ஐ குணசேகரன், ஆகியோர்போலீசாருடன் சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையில், பள்ளிகளில் சமைக்கப் பயன்படுத்தப்படும் 50கிலோ அரிசி மூட்டைகள் 23, 100 கிலோ, 3 மூட்டைகள் பருப்பு 100கிலோ, உப்பு 25 கிலோ, பாமாயில் 5 கிலோஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த பொருட்கள் அயோத்தியப்பட்டிணம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வாணிபக் கழக கிடங்கு எழுத்தர்கள் பொய்யாமொழி, பழனியப்பன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.
மேலும் இப்பொருட்களை எடுத்து வந்த லாரி டிரைவர் ஜி. பெரியசாமி, எம். செல்லப்பன் ஆகியோரையும் கைதுசெய்தனர். கைதான நான்கு பேரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை 15 நாள் காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.