இந்திய அமைச்சரை திடீரென சந்தித்த ஜார்ஜ் புஷ்
வாஷிங்டன்:
அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங்கை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் திடீரென சந்தித்துப் பேசினார்.
அவர் திங்கள்கிழமை இரவு அமெரிக்காவில் பாதுகாப்பு ஆலோசகர் காண்டோலீஸ்ஸா ரெய்ஸை வெள்ளை மாளிகையில்சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதிபர் புஷ் திடீரென ரெய்சின் அறைக்கு வந்தார்.
ஜஸ்வந்த் சிங்குடன் ஆலோசனையில் புஷ்சும் கலந்து கொண்டார். இந்த திடீர் சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தது.
இந்தியாவில் நேற்று காஷ்மீர் சட்டசபை மீது பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்ட தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்குறித்து புஷ்சிடம் விளக்கிய ஜஸ்வந்த் சிங், தீவிரவாதத்தை அமெரிக்கா ஒழிக்க விரும்பினால் பின் லேடனை பிடித்தால் மட்டும்போதாது. பின் லேடனின் அல்-காய்தா அமைப்பு தவிர பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்டு வரும்உதவிகள் குறித்தும் அமெரிக்கா கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்து தலிபான்களை விரட்டினால் தான் அங்கு தீவிரவாதத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியும் எனவும் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
இந்திய அமைச்சரின் கருத்துக்களை கேட்ட புஷ், இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட அழைப்புவிடுத்தார். இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் தீவிரவாதிகளின் தாக்குதலையும் சர்வதேச தீவிரவாதமாகவே அமெரிக்கா கருதும்எனவும், அதை எதிர்த்துப் போரிட அமெரிக்கா உதவும் எனவும் புஷ் உறுதியளித்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் எதிர் படையினரை உலகின் எல்லாநாடுகளும் அங்கீகரித்து உதவ வேண்டும் என ஜஸ்வந்த் சிங் கூறினார்.
தலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை. இருவருமே தீவிரவாதத்தை ஊக்குவித்துவருகின்றனர் எனவும் ஜஸ்வந்த் சிங் குறிப்பிட்டார்.
புஷ்சுடன் சந்திப்பு முடிந்த பின்னர் ஜஸ்வந்த் சிங்கும் காண்டலீஸ்ஸா ரெய்சும் மீண்டும் சந்தித்துப் பேசினர்.
இன்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட், வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் ஆகியோரையும்சிங் சந்திக்க உள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சராகவும் ஜஸ்வந்த் சிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.