கொள்ளையர்களிடமிருந்து தப்புவது எப்படி?
சென்னை:
சென்னை நகரில் கொள்ளையர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மாநகர காவல்துறைஅறிவித்துள்ளது.
அறிமுகம் இல்லாத நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் காவல்துறை கூறியுள்ளது.
சென்னையில் பகல், இரவு என இரு வேளைகளிலும் கொள்ளையர்கள் மிக பிசியாக உள்ளனர். போலீசாருக்கு மாமூல்வேலைகளில் ஈடுபட்டவே நேரமில்லையாதலால் கொள்ளையர்கள் பூட்டுகளை உடைப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டுச்சுவர்களையும் உடைத்துக் கொள்ளையடித்து வருகின்றனர்.
இது தவிர ரோட்டில் நடந்து செல்லும்போதே வழிப்பறி, ஏமாற்றிப் பணம் பறிப்பதும் சென்னையில் அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் திருடர்கள், கொள்ளையர்களிடமிருந்து மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வது உத்தமம் என்றுகாவல்துறை நினைக்கிறது. கொள்ளையர்களிடமிருந்து தப்புவது எப்படி என்று ஒரு விளக்க அறிக்கையும் கொடுத்துள்ளது.
அதன் விவரம்:
உங்கள் சட்டை மீதோ அல்லது உடல் மீதோ, காக்கை எச்சில் இருப்பதாக யாராவது கூறினால் உடனே பதற்றப்பட்டு சட்டையைப் பார்க்க முயற்சிக்காதீர்கள். விழிப்புடன் இருந்து கூறும் நபரை ஒரு நிமிடம் உற்று நோக்குங்கள்.
வங்கிகளில் பணம் எடுத்து விட்டுத்திரும்பும் போது, பணத்தைக் கீழே போட்டு அல்லது சில்லறையை சிதற விட்டு சிலர்கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பார்கள். அதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்கள், குளிர் பானங்கள்,
சிகரெட் மற்றும் வேறு எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளாதீர்கள். இவற்றில் மயக்க மருந்து கலந்திருக்கலாம்.
வீட்டின் கதவை யாராவது தட்டினால் ஜன்னல் அல்லது கதவு துவாரத்தின் வழியாக யார் என்று பார்த்து விட்டு பின்னர் திறங்கள். பாதிக் கதவை திறந்து வைத்துக் கொண்டு பேசி அனுப்ப முயற்சியுங்கள். நன்கு தெரிந்தவர்கள்என்றால் மட்டும் உள்ளே அனுமதியுங்கள்.
ஆட்டோ, டாக்சி, கால் டாக்சி போன்றவற்றில் பயணம் செய்யும்போது அவற்றின் எண்ணைக் குறிப்பிட்டு வைத்துக் கொள்ள மறக்காதீர்கள்.
தெருக்களில் அல்லது வீடுகளுக்கு முன் அறிமுகம் இல்லாத, அந்த ஏரியாவுக்கு பழக்கமில்லாத நபர்கள் அடிக்கடி தென்பட்டால்அவர்கள் குறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவியுங்கள்.
இவ்வாறு போலீஸ் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயில் கசிகிறது பாருங்கள் .. ரூ. 33,000 பறிப்பு:
இந்தச் செய்திகுறிப்பு வெளியான சில மணி நேரத்தில் சென்னையில் நூதனமான முறையில் பணம் திருடப்பட்டது.
ஆவடி காமராஜர் புரத்தைச் சேர்ந்தவர் வில்லியம். இவர் வங்கியில் ரூ. 33,500 பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். வந்து கொண்டிருந்தபோது, எதிரில் குறுக்கிட்ட இருவர், சார் வண்டியிலிருந்து ஆயில் கசிகிறதுபாருங்கள் என்று கத்தியுள்ளனர்.
இதையடுத்து பயந்து போன வில்லியம், வண்டியை நிறுத்தி விட்டு கீழே பார்த்துள்ளார்.
அப்போது அவர் வைத்திருந்த பணப் பையை அவர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.