மதிமுகவின் எதிர்காலம்: "புஸ்" ஆகிப் போன பொதுக் குழு கூட்டம்
சென்னை:
மதிமுகவின் எதிர்காலம் குறித்து ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் பேசி ஆலோசித்த பின்னர் இறுதி முடிவுஎடுக்கப்படும் என அக் கட்சியின் அவைத் தலைவரான எல். கணேசன் கூறினார்.
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் தனக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்துள்ள வீடியோ ஆதாரங்களை நேற்றுபார்த்த பின்னர் நிருபர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, மதிமுகவின் எதிர்காலம் குறித்துநாளை (இன்று) மாலைக்குள் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தனது இந்த அறிவிப்பின் மூலம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை வைகோ உருவாக்கினார்.
பொதுக் குழு கூட்டம்:
இந்நிலையில் மதிமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று பகலில் நடந்தது.
மதிமுக அவைத் தலைவர் எல். கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள்கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்திற்குப் பின்னர் இன்று மாலை நிருபர்களிடம் கணேசன் கூறுகையில்,
இப்போதைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைகளிலிருந்து மதிமுக வெளிவரவில்லை. அதனால்கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்தும் இப்போது நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஆனால் ஒத்த கருத்துள்ள வேறு சில கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் மதிமுகவின் எதிர்காலம் குறித்தஇறுதி முடிவை அறிவிப்போம்.
சில சமயங்களில் பா.ஜ.கவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வது போலத்தெரிகிறது. உதாரணத்துக்கு அயோத்தி விவகாரத்தைக் கூறலாம். இது எங்களுக்குப் பெரும் சந்தேகத்தைஏற்படுத்தியுள்ளது.
ஆனால் காலம்தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்றார் கணேசன்.
இந்தக் கூட்டத்தில் வி.எச்.பி. அமைப்புக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்எடுக்கப்பட்டுள்ளன.
விலகிச் செல்லும் வைகோ:
தன் கைது விவகாரத்தில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தன்னைக் கைவிட்டுவிட்டதாக வைகோகருதுகிறார். இதையடுத்து திமுகவுடன் இணைந்து மத்திய அரசுக்கு அவ்வப்போது எதிர்ப்பும் தெரிவிக்கஆரம்பித்துள்ளார்.
வைகோவின் கோபம் அறிந்த பிரதமர் வாஜ்பாய் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டஸை அவ்வப்போது அனுப்பி சமாதானப்படுத்தி வருகிறார். அப்போதெல்லாம் துணைப் பிரதமர்அத்வானி மீதும் தனது கோபத்தை வைகோ வெளிப்படுத்தினார்.
இந் நிலையில் வைகோவுக்கு சமீபத்தில் கடிதமும் அனுப்பினார் வாஜ்பாய்.
அத்வானியுடனான தனது நெருக்கத்தை வைத்துத் தான் முதல்வர் ஜெயலலிதா எதிர்க் கட்சிகளை அடக்கிவருவதாக வைகோ கருதுகிறார்.
தான் சிறையை விட்டு எப்போது வெளியே திரும்புவேன் என்று தெரியாத நிலையில், மதிமுகவின் எதிர்காலம்குறித்து இன்று மிக முக்கிய முடிவை எடுக்கப் போவதாக வைகோ அறிவித்திருந்தார்.
நேற்று பூந்தமல்லி சிறைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய வைகோ, இன்று எங்கள் கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதில் மிக முக்கியமான முடிவை எடுக்க உள்ளோம். இதுமதிமுகவின் அரசியல் வரலாற்றில் மைல் கல்லாக அமையும்.
மாவட்டச் செயலாளர்கள் எடுக்கும் முடிவை கட்சியின் பொதுக் குழு தீர்மானமாக நிறைவேற்றி முக்கிய முடிவைஅறிவிக்கும்.
நான் புலிகளை ஆதரித்துப் பேசிய வீடியோ ஆதாரங்களைக் காட்டினார்கள். நான் என்ன பேசினேனோ அதைமாற்றிக் கொள்ள மாட்டேன். ஆடியோ ஆதரங்களைக் கேட்க விரும்பவில்லை என்று கூறிவிட்டேன்.நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. வழக்கையும் இழுத்தடிக்க நான் விரும்பவில்லைஎன்றார் வைகோ.
திமுகவுடன் மீண்டும் இணையப் போகிறீர்களா?, மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து வெளியேறப்போகிறீர்களா? தலைமைப் பதவியை ராஜினாமா செய்யப் போகிறீர்களா போன்ற கேள்விகளுக்கு, பொறுத்திருந்துபாருங்கள் என்று மட்டும் வைகோ பதிலளித்துவிட்டுக் கிளம்பினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் பெரிய அளவிலான எந்தவித முடிவும்எடுக்கப்படவில்லை.
-->