ஜெ. கொடுத்த தங்க மகுடம்: வருமான வரித்துறை விசாரணை
குருவாயூர்:
குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேர்த்திக்கடனாக வழங்கிய தங்க மகுடத்தை வருமான வரித்துறைஅதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
இதற்கு குருவாயூர் கோயில் பக்தர்கள், இந்து மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குருவாயூரில் உள்ள பிரபல கிருஷ்ணன் கோயிலுக்கு கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி ஜெயலலிதா வருகை தந்தார்.அப்போது ஒரு யானை, 349 கிராம் எடையுள்ள, 26 கற்கள் பதிக்கப்பட்ட தங்க மகுடம், யானையைப் பராமரிப்பதற்கான செலவாக ரூ. 1லட்சத்து 500 ஆகியவற்றை கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
இதுதவிர பால்பாயாசம், வெண்ணெய், நெய் ஆகியவற்றால் பூஜை செய்ய தனியாக ரூ. 75,651 பணம் கோயிலில் கட்டப்பட்டது.ஜெயலலிதா கொடுத்த இந்த நேர்த்திக்கடன் மற்றும் தானம் குறித்து 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை சார்பில்குருவாயூர் தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், ஜெயலலிதா கொடுத்த பொருட்கள், அதன் மதிப்பு குறித்த விவரம் குறித்துக் கேட்கப்பட்டிருந்தது. கோயிலும் அதற்கு உரிய பதில்அளித்திருந்தது. ஆனால் தேவஸ்தானம் அளித்த பதிலில் திருப்தி இல்லை என்று தெரிவித்த வருமான வரித்துறை, ஜெயலலிதா கொடுத்ததங்க மகுடத்தை நேரடியாக பரிசோதிக்க வேண்டும் என்று குருவாயூர் கோயிலுக்கு கடிதம் அனுப்பியது.
ஆனால் வருமான வரித்துறையின் கோரிக்கைக்கு குருவாயூர் தேவஸ்தானம் பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து பலமுறை வருமானவரித்துறை சார்பில் கடிதம் அனுப்பியும், தேவஸ்தானம் அதைக் கண்டுகொள்ளவில்லை.
குருவாயூர் கோயிலுக்கு தானமாக கொடுக்கப்படும் நகைகள், பொருட்கள், யானைகள் ஆகியவை கடவுளுக்குக் கொடுக்கப்பட்டபொருட்களாக கிருஷ்ண பக்தர்களால் கருதப்படுகிறது. இந் நிலையில் கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தங்க மகுடத்தை வருமான வரிஅதிகாரிகள் பார்வையிட அனுமதித்தால் அது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று கோயில் நிர்வாகம் கருதியதால்அனுமதி கொடுக்க மறுத்து வந்தது.
இந் நிலையில், கடந்த மாதம் வருமான வரித்துறை சார்பில் தேவஸ்தானத்திற்கு மிரட்டலுடன் கூடிய கடிதத்தை அனுப்பப்பட்டது. தங்கமகுடத்தை ஆய்வு செய்ய அனுமதிக்காவிட்டால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மேலும், அக் கடிதத்தில், வருமான வரித்துறை ஆணையர் பி.கே.விஜயக்குமார் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் 8ம் தேதிகுருவாயூர் வருகிறார்கள். அப்போது தங்க மகுடத்தைப் பரிசோதனை செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த அனுமதிப்பது என தேவஸ்தான நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. 8ம்தேதி மாலை 3 மணியளவில் தங்க மகுடம், ரகசிய அறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு வருமான வரித்துறை அதிகாரியின்ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
ஜெயலலிதா கொடுத்த தங்க மகுடத்தை வருமான வரித்துறை அதிகாரி சோதனையிட வருவது குருவாயூரில் பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது. கோயிலின் புனிதத்தையும், பக்தர்களின் மனதையும் புண்படுத்துவதாக இது உள்ளது என்று குருவாயூர் பக்தர் சங்கம்,அகில பாரத குருவாயூரப்பா பக்தர் சங்கம் மற்றும் பல்வேறு மத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குருவாயூர் தேவஸ்தானத்திற்கு தற்போது நிரந்தர நிர்வாகம் இல்லை. கேரள மாநில அரசின் அறநிலையத்துறை ஆணையரின் கீழ்இடைக்கால நிர்வாகம் தான் நடந்து வருகிறது. மத்தியில் நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் திமுகவைச் சேர்ந்தபழனிமாணிக்கத்தின் உத்தரவின் பேரில்தான் வருமான வரி சோதனை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
இந் நிலையில் கோவிலின் நிர்வாகியான அனில் குமாரிடம் கேரள அரசு இந்த விவகாரம் குறித்து விளக்கம் கோரியுள்ளது. அவரதுவிளக்கத்தின் அடிப்படையில், கோவிலில் ஆய்வு செய்ய வருமான வரித்துறையினரை அனுமதிப்பதா இல்லையா என கேரளஅமைச்சரவை முடிவு செய்யவுள்ளது.