சுனாமி தாக்கிய கிராமத்தில் சாராய சோகம்: 3 பேர் சாவு- 31 பேர் மருத்துவமனையில்..
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் கள்ள சாராயம் குடித்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.மேலும் 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன.ஆனால் இந்த உதவிகளை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அரசு வழங்கிய நிவாரணத் தொகையை சிலர் குடித்து சீரழிப்பதாகவும், சுனாமி சோகத்தால் ஆண்கள் மத்தியில் குடிப் பழக்கம்அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப் பகுதியில் விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தைக்குடித்தனர். இக் கிராமம் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமமாகும்.
இந்தச் சாராயத்தைக் குடித்த சில நிமிடங்களிலேயே அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 34 பேர் நாகர்கோவில் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருதயராஜ் (65), ராஜ்(33) மற்றும் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 8 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பெரும்பாலோனோர் மீனவர்கள் ஆவர்.
சுனாமியால் படகுகள், வலைகளை இழந்துவிட்ட இவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல், அரசு வழங்கிய நிவாரணத் தொகையில் சாராயம்வாங்கிக் குடித்துள்ளனர். இந்தச் சாராயம் கேரளத்தில் இருந்து வந்ததாகவும், அதில் அதிக போதைக்காக வார்னீஷ் போன்ற விஷப்பொருட்கள் கலந்திருந்தாகவும் கூறப்படுகிறது.
நாகப்பட்டினத்தில்..:
கன்னியாகுமரியில் மட்டுமல்லாது நாகப்பட்டினத்திலும் மீனவர்கள் பலர் தங்களுக்கு கிடைத்த நிவாரணத் தொகையை அரசுமதுக்கடைகளில் குடித்து சீரழித்து வருகின்றனர்.
இங்கு காலை 8 மணி முதலே மதுபான விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இது குறித்து ரத்தினவேல் (58) என்ற மீனவர் கூறுகையில்,சுனாமி அலை தாக்குதலில் எனது மகன், மகள், சகோதரர், மருமகள் அனைவரையும் இழந்துவிட்டேன். அந்த சோகத்தை மறக்கத்தான்குடிக்கிறேன் என்றார்.
ரவி என்ற மீனவர் (24) கூறுகையில், படகு இல்லாததால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடியவில்லை. எங்களுக்கு பொழுது போககுடிப்பதை விட்டால் வேறு என்ன இருக்கிறது என்றார்.
தமிழக அரசு கொடுத்த ரூ.4,000 பணத்தை வைத்துத்தான் இவர்கள் குடித்து வருகிறார்கள். சுனாமி தாக்குதலையடுத்து நாகப்பட்டினத்தில்அரசு மதுக்கடைகளில் மது விற்பனை இரண்டு மடங்காகியிருப்பதாக டாஸ்மாக் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தவிர்க்க மீனவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும்வரை அரசு மதுக்கடைகளை மூடி வைக்க வேண்டும் என்றுதொண்டு நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.