நாட்டின் உடனடி தேவை நதிகள் இணைப்பு: கலாம் சுதந்திர தின உரை
டெல்லி:
நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது சுதந்திரதின உரையில் கூறினார்.
நாட்டின் 59வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று தொலைக்காட்சி மற்றும் வானொலிமூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், மகராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், ஒரிசா உட்பட பலமாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பெருமளவு உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டன.இத்தகைய சேதங்கள் ஆண்டு தோறும் ஏற்பட்டு வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த பெருநகரங்களில் வெள்ள நீர் வடிகால்கட்டடமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்.
இது ஒருபுறமென்றால் மறுபுறம் நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சியும் நிலவுகிறது. இவ்வாறு வெள்ளமும் வறட்சியும்ஏற்படும்போது மட்டுமே நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து பேசுவதும், பிறகு அதை மறந்து விடுவதும் வழக்கமாகி விட்டது.
இனி அவ்வாறு நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது. நதி நீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற முயற்சிமேற்கொள்ளப்பட வேண்டும். இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு தடைகளை நாம் கடக்க வேண்டும்.
இந்தத் தடைகள் அனைத்தையும் முறியடித்து நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற நாம் முயற்சி எடுக்க வேண்டியதுமிகவும் அவசியமாகும்.
வெள்ளம், கடும் வறட்சி ஆகியவற்றிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற நாம் உறுதி மேற்கொள்ள வேண்டும். இதற்கு நதி நீர்இணைப்புத் திட்டம் தான் சிறந்த தீர்வாக அமையும்.
உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 15 சதவீதம்.ஆனால் உலக கச்சா எண்ணை மற்றும் எரிவாயு உற்பத்தியில்இந்தியாவின் பங்கு வெறும் 0.8 சதவீதம் மட்டுமே. எனவே எரிசக்தி உற்பத்தியில் 2030ம் ஆண்டுக்குள் நமது நாடுதன்னிறைவை பெறவேண்டியது மிகவும் அவசியமாகும்.
இதே போல மின் உற்பத்தியையும் நாம் அதிகரிக்க வேண்டும். நகரங்களில் குவியும் திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்ய தீவிர முயற்சி தேவை. மேலும் அணுமின் உற்பத்தியையும் 10 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றார் கலாம்.