கெட்ட ரத்தம் அகல திமுகவுக்கு வாக்கு-கருணாநிதி
கடலூர்:
தமிழகத்தை சூழ்ந்துள்ள கெட்ட ரத்தம் அகல ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழகமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த திமுக தலைவர் கருணாநதி வடலூரில் நடந்த கூட்டத்தில்பேசுகையில்,தமிழகத்தைச் சூழ்ந்துள்ள கெட்ட ரத்தம் அகல ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அத்தனையும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
சத்துணவில் நிரந்தரமாக முட்டை வழங்கப்படும். கலர் டிவி தரப்படும், 2 ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்கப்படும்.
நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தே, 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்திற்குத்தான், 2வதுகையெழுத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது,
3வது கையெழுத்து திமுக ஆட்சிக் காலத்தில் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு, ஜெயலலிதாவால்நிறுத்தப்பட்ட, ஏழைப் பெண்கள் திருமண நிதியுதவித் திட்டத்தை மீண்டும் புதுப்பித்து முன்பு வழங்கப்பட்ட ரூ.10,000க்குப் பதில் ரூ. 15,000 ஆக வழங்க உத்தரவிடுவேன் என்றார் கருணாநிதி.
காவிரி டெல்டாவில் இன்று பிரசாரம்:
இதற்கிடையே இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் கருணாநிதி பிரசாரம்மேற்கொள்கிறார்.
மாலை 4 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் அவர் கொள்ளிடத்தில் பேசுகிறார். பின்னர் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேராளம்,பூந்தோட்டம், சன்னநல்லூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இரவு 7 மணிக்கு திருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் குடவாசல், நாச்சியார்கோவில் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம்செய்யும் கருணாநிதி கும்பகோணத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தோடு தனது இன்றைய பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
திமுக தரப்பில் பொதுச் செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் நாளை மனு தாக்கல் செய்வர். தலைவர் கருணாநிதி 17ம்தேதி தனதுவேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.