நாளை கலாம் தமிழகம் வருகை
சென்னை:குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று இரவு பெங்களூர் போகிறார். நாளை அங்கு சில நிகழ்ச்சிகளில்பங்கேற்கும் கலாம் பின்னர் நாளை பிற்பகல் விமானம் மூலம் கோவை வருகிறார்.
கோவை வந்த பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு செல்கிறார். அங்கு கொங்கு அறிவியல் கல்லூரியில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள 14வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை கலாம் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சித்தோடு அருகே உள்ள கங்காபுரத்திற்குச் செல்கிறார். அங்கு இந்தியமருத்துவ சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புற்று நோய் சிகிச்சை மையத்தைத்திறந்து வைக்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கோவை திரும்புகிறார்.
மாலை 5.30 மணிக்கு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலகத் தமிழ்இலக்கியக் கருத்தரங்கை கலாம் தொடங்கி வைக்கிறார். காலச்சுவடு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்நிறுவனம் இணைந்து இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த கருத்தரங்கின்போது பாரதியாரின் 125வது பிறந்த நாள், புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா, சுந்தரராமசாமியின் 75வது பிறந்த நாள் ஆகியவை கொணடாடப்படுகிறது.
மூன்று பேரின் உருவப் படங்களையும் குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன்தலைமை தாங்குகிறார். விழாவின்போது சுந்தரராமசாமியின் இணையதளத்தையும் கலாம் தொடங்கி வைக்கிறார்.
புதுமைப்பித்தன் மகள் தினகரி சொக்கலிங்கத்திற்கு கலாம் விருது வழங்குகிறார். பின்னர் இளைய தலைமுறைபெண் படைப்பாளிகளுக்கும் பரிசுகளை வழங்குகிறார். தனது உரையை தமிழிலேயே நிகழ்த்தவுள்ளார்.
இதுதவிர சித்திர பாரதியின் 3வது பதிப்பு, பாரதியின் முழுச் சிறுகதைகள் தொகுப்பு, புதுமைப்பித்தனின்மொழிபெயர்ப்புகள், புதுமைப்பித்தன் குறித்த சுந்தரராமசாமியின் கட்டுரைத் தொகுப்பு ஆகிய நூல்களும்விழாவின்போது வெளியிடப்படவுள்ளன.
கருத்தரங்கில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்டதமிழறிஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பீளமேடு சிஐடி கல்லூரி பொன்விழா நிறைவு நிகழ்ச்சியில் கலாம் பங்கேற்கிறார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கும் பங்கேற்கிறார்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு கோவையில் தங்கும் கலாம் அடுத்த நாள் காலை கோவைஅவினாசிலிங்கம் பல்கலைக்கழக மனையியல் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவியர்களுடன்உரையாடுகிறார்.
பின்னர் கொடிசியா மைதான;த்தில் நடைபெறும் இந்திய ஒருமைப்பாட்டு விழிப்புணர்வு என்ற நிகழ்ச்சியில்கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பொள்ளாச்சிக்கு பயணிக்கிறார். அங்கு முற்பகல் 11.30 மணியளவில் பொள்ளாச்சிநாச்சிமுத்து பாலிடெக்னிக் பொன்விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு கலாம் புறப்பட்டுச்செல்கிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கோவை, ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலத்தபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications