ராமதாஸ் எச்சரிக்கை எதிரொலிமணல் கொள்ளையர்களுக்கு எதிராக வேட்டை
சென்னை:டாக்டர் ராமதாஸின் போராட்ட அறிவிப்பையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் மணல் கொள்ளையர்களை அதிகாரிகள் வேட்டையாடி வருகின்றனர். பல லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கேரள மாநிலத்திற்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகள் துணையோடும், அதிகாரிகளின் ஆசியோடும் கடத்தப்பட்டு வருகிறது.
இதனால் தாமிரபரணி நதியின் நீர் பிடிப்பு அழியும் ஆபத்து உருவாகியுள்ளது. இதனை தடுக்கக்கோரி கம்யூ. கட்சி தலைவர்கள் நல்லக்கண்ணு, வரதராஜன், புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மணல் கொள்ளையைக் கண்டித்து வருகிற 7-ந் தேதி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நெல்லையில் போராட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். அதில், மணல் திருட்டுக்கு துணை போனால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யார் மணல் கடத்தினாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
இதையடுத்து தமிழக-கேரள எல்லையான பிரானூர்-பார்டரில் தென்காசி டி.எஸ்.பி மயில் வாகணன் தலைமையில் சுமார் 35-க்கும் மேற்பட்ட போலீசார் மணல் லாரிகளை சோதனையிட்டனர்.
அளவுக்கு அதிகமான மணல் கொண்டு வந்த சுமார் 67-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 12 லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட 24 டிரைவர்கள், கிளினர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகளின் திடீர் சோதனயைப் பார்த்த பலர் லாரிகளை ஆங்காங்கு நிறுத்தி கூடுதல் மணலை சாலையோரம் கொட்டி விட்டனர்.
அதிகாரிகளின் சோதனையால் லாரிகளின் எடையை கணக்கிடும் எடை மேடை வைத்துள்ளவர்களுக்கு குஷியாகி விட்டது. திடீரென அதிக அளவில் வாகனங்கள் எடை போட வந்ததால் அவர்கள் கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.
இதேபோல, சென்னை உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மணல் கொள்ளையர்களை அதிகாரிகள் வேட்டையாடி வருகின்றனர்.
சென்னை அருகே கொரட்டூர், புதுச்சத்திரம் ஆற்றுப் பகுதியில் பெருமளவில் மணல் கொள்ளை நடப்பது வழக்கம். இங்கு பூந்தமல்லி தாசில்தார் சவுரிராஜன் அதிகாரிகள் புடை சூழ அங்கு விரைந்தார்.
அவர்களைப் பார்த்ததும் மணலை அள்ளிக் கொண்டிருந்தவர்கள் லாரிகளைப் போட்டு விட்டு தப்பி விட்டனர். இதேபோல சொராஞ்சேரி என்ற இடத்திலும், சோதனை நடந்தது. அப்போது மணலை திருட்டுத்தனமாக அள்ளிக் கொண்டிருந்த லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் ஓடி விட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லையில் மணல் கொள்ளையர்களைப் பிடிக்க வேட்டை நடந்தது. அவற்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 9 லாரிகளைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மாநிலம் முழுவதும் மணல் கொள்ளையர்களைப் பிடிக்க அதிகாரிகளும், காவல்துறையினரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.