நாளை சனிப் பெயர்ச்சி- திருநள்ளாரில் சிறப்பு ஏற்பாடு
சென்னை:நாளை சனிப்பெயர்ச்சியையொட்டி புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ள தர்பாரேணேஸ்வரர் (சனி பகவான்) ஆலயத்திற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 மாதங்களுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நடைபெறும். நாளை சனிப் பெயர்ச்சி.
சனி பகவான், நாளை பிற்பகல் சரியாக 12 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயருகிறார்.
இதையொட்டி சனி பகவான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நாளை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமையன்று இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த முறை சனிப் பெயர்ச்சியும் சேர்ந்துள்ளால், நாளை கோவிலுக்கு பெருமளவிலான பக்தர்கள் வருவார்கள்.
சனி பகவான் ஆலயத்திற்கு வருவோர் முதலில், நள தீர்த்தத்தில் மூழ்கிக் குளிக்க வேண்டும். அதன் பின்னரே கோவிலுக்குள் வர வேண்டும் என்பது ஐதீகம்.
கடந்த ஆண்டு சனி பெயர்ச்சியின்போது 8 லட்சம் பக்தர்கள் வந்ததாக கணக்கிடப்பட்டது. இந்த முறை இது 10 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வசதிக்காக ரூ. 600 மற்றும் ரூ. 50 ஆகிய கட்டணங்களில் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. ஐந்து பேருக்கு மேல் வந்திருப்போர் ரூ. 600 கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கினால் சுவாமி தரிசனம் செய்ய விரைவாக செல்ல முடியும். வழக்கமான இலவச தரிசனமும் உண்டு.
நாளை சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்க காக வாகனத்தில் கோவிலைச் சுற்றி சனி பகவான் வலம் வருவார்.
இதற்காக பாதுகாப்புப் பணியில் 3,000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சனிப் பெயர்ச்சி விழா, தொலைக்காட்சி மூலம் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
திருநள்ளாருக்கு புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.