கேகேஎஸ்எஸ்ஆர், எம்ஆர்கே இலாகாக்கள் பறிப்பு-சுரேஷ் ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு!
சென்னை:
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடமிருந்து அத்துறை இன்று பறிக்கப்பட்டது. அவருக்குப் பிற்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் இன்று சிறிய அளவிலான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பொறுப்பு ராமச்சந்திரனிடமிருந்து பறிக்கப்பட்டு, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் வழங்கப்பட்டது.
சாத்தூர் ராமச்சந்திரனிடம் பிற்பட்டோர் நலத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் பிற்பட்டோர் நலன், மிகவும் பிற்பட்டோர் நலன், சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் நலன் ஆகிய இலாகாக்களை இனி கவனிப்பார்.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இனி சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் ஆகிய துறைகளை கவனிப்பார்.
பன்னீர் செல்வத்திடம் இருந்த பத்திரப் பதிவு, முத்திரைத்தாள் சட்டம் ஆகிய இலாகாக்கள் சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையில்பேரில் இந்த மாற்றங்களை ஆளுநர் பர்னாலா செய்துள்ளார்.
தமிழகத்தை சிக்குன் குனியா காய்ச்சல் உலுக்கி எடுத்தபோது அதை ஆரம்பத்திலேயே தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவியது. அந்த சமயத்தில் சிக்குன் குனியாவே தமிழகத்தில் இல்லை என்று அமைச்சர் ராமச்சந்திரன் மறுத்து வந்தார். பின்னர் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியது.
சிக்குன் குன்யா விவகாரத்தின்போதே அமைச்சர் ராமச்சந்திரன் மீது முதல்வர் கருணாநிதி அதிருப்தி அடைந்திருந்தார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சல் பரவியது. ஒரு மாணவி பலியானார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மர்மக் காய்ச்சல் பரவியது.
இந்த நிலையில், சாத்தூர் ராமச்சந்திரனிடமிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 31 பேர் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications