காங். தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டார்- வேல் கம்பால் குத்து
மதுரை: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மதுரை அருகே சிலரால் வேல் கம்பால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழா, சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா, சேது நாடு தெய்வீகப் பேரவை நிறுவனத் தலைவர் தமிழ்க் குடிமகனுக்குப் பாராட்டு விழா ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திராவிட விழிப்புணர்ச்சிக் கழகத் தலைவர் பி.டி.குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணசாமி நேற்று மதுரையிலிருந்து கார் மூலம் முதுகுளத்தூரை நோக்கிப் புறப்பட்டார். காரின் முன்பகுதியில் அவர் இருந்தார். பின் இருக்கையில், கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
இரவு 8 மணியளவில் கார் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழ் கன்னிச்சேரி என்ற இடத்தில், சென்ற போது திடீரென அங்கு 50 பேர் கொண்ட கும்பல் வந்து கார்களை சுற்றி வளைத்தது.
தலையில் டார்ச் லைட்டுகளைக் கட்டியபடி வந்த அவர்கள், கையில் தீப்பந்தங்கள், வேல் கம்பு, அரிவாள், உருட்டுக் கட்டைகள் என பயங்கர ஆயுதங்களுடன் காணப்பட்டனர்.
கிருஷ்ணசாமியின் காரை வழிமறித்த அக்கும்பல் கார் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியது. பின்னர் காருக்குள் அமர்ந்திருந்த கிருஷ்ணசாமியை வேல் கம்புகளால் தாக்கினர். இதில் நிலை குலைந்த கிருஷ்ணசாமி படுகாயமடைந்தார்.
கார் டிரைவர் கல்வீச்சில் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த கிருஷ்ணசாமியையும் மற்றவர்களையும் உடனடியாக பரமக்குடி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணசாமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மதுரைக் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் மீதான தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.டி.குமாரைத் தாக்க வந்தவர்கள், தவறுதலாக கிருஷ்ணசாமியைத் தாக்கி விட்டதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால் பரமக்குடி - முதுகுளத்தூர் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணசாமி பங்கேற்பதாக இருந்த முப்பெரும் விழாவும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் ராமதாஸின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் கடும் கண்டனம்:
காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமியை வேல் கம்பால் குத்தித் தாக்கிய சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் சுதர்சனம் கூறுகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை கொல்ல முயன்றுள்ளனர்.
அதில் இருந்த தப்பிய அனைவரும் தாக்கப்பட்ட தலைவரை உடனடியாக பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைஅப்பல்லோ மருத்துவனையின் அவசர சிகிச்சைப் பேரில் சேர்த்துள்ளனர்.
இந்த தகவல் கிடைத்தவுடன் முதல்வர் கருணாநிதியுடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன். நான் பேசுவதற்கு முன்னதாகவே அவருக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஆணையிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். கூடுதல் டிஜிபி விஜயக்குமார் சம்பவ இடத்திற்கு செல்லும்படி ஆணையிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த செயலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
வரதராஜன் கண்டனம்:
கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கிருஷ்ணசாமியை பார்த்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அராஜகமான, ஆத்திரமூட்டக் கூடிய ஜனநாயகத்தை நாசப்படுத்தக் கூடிய கூட்டம் ஒன்றின் செயல் இதில் அடங்கியுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இதேபோல நடிகர் சரத்குமாரும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரும் மருத்துவமனைக்குச் சென்று காங்கிரஸ் நிர்வாகிகளைப் பார்த்து கிருஷ்ணசாமியின் நலம் விசாரித்தார்.
முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று கிருஷ்ணசாமியின் நலம் விசாரித்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வது தொடர்பான பணிகளையும் அவர்கள் முடுக்கி விட்டனர்.
நல்ல நினைவுடன் உள்ளார் - டாக்டர்கள்:
இதற்கிடையே, வேல் கம்பால் குத்தப்பட்ட கிருஷ்ணசாமி நல்ல நினைவுடன் உள்ளதாகவும், தேறி வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த பிறகுதான் வேல் கம்பு எந்த அளவு ஆழத்திற்குப் பாய்ந்துள்ளது என்பது தெரிய வரும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலை மறியல்-கைது !!
இதற்கிடையே கிருஷ்ணசாமியை கத்தியால் குத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க். சுப்பிரமணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் செய்தனர். மேலும் பஸ் நிலையம் அருகில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்து சிறுது நேரம் பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை கரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் கைது செய்தார்.