கன்னியாகுமரி To டெல்லி: விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணி
திருநெல்வலி: தேசிய விவசாய தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரி கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி நெல்லை வந்தது.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி தேசிய விவசாய தோட்டக்கலை சார்பில் கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு 100 பேர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர். மாவட்ட எஸ்பி சந்தோஷ்குமார் பேரணியை துவக்கி வைத்தார்.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட வேண்டும். அனைத்து விவசாயிகளும் வீட்டில் ஒரு பழ வகை செடி வளர்க்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டையுடன் பேரணி சென்றது.
குமரியில் துவங்கிய மோட்டார் சைக்கிள் பேரணி நெல்லை வந்தடைந்தது. இங்கிருந்து நாளை சென்னை செல்லும் இவர்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கிறார்கள்.
இதன்பிறகு ஆந்திரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா வழியாக டெல்லிக்கு டிசம்பர் மாதம் 11ந் தேதி சென்றடைகிறது. அங்கு பேரணி நிறைவு விழா நடக்கிறது.
இந்த நிறைவு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், பேரணி ஒருங்கிணைப்பாளர் கிரிசிபூசன் கோவிந்தராவ் பவார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.