டாலர் சரிவு: கோவில்பட்டியில் ரூ.100 கோடி தீப்பெட்டிகள் தேக்கம்
கோவில்பட்டி: அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், கோவில்பட்டி பகுதியில் ரூ. 100 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் வியாபாரிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய வர்த்தகர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.
ஏற்கனவே டாலர் சரிவால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க திருப்பூர் பகுதி வர்த்தகர்கள், தங்களது வியாபாரத்தை டாலரிலிருந்து ஈரோவுக்கும், பவுண்டுக்கும் மாற்றி விட்டனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டித் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க இணை செயலாளர் தேவதாஸ் கூறுகையில்,
கடந்த ஓராண்டிற்குள் தீப்பெட்டி தயாரிப்பு மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
கேரளாவிலிருந்து வரும் குச்சி விலை ரூ.11லிருந்து ரூ.23 ஆகவும், அட்டை விலை ரூ.23லிருந்து ரூ.32 ஆகவும், குளோரேட் டன்னுக்கு ரூ.6,000 ஆகவும், சல்பர் டன்னுக்கு ரூ.10,000 ஆகவும், மெழுகு ரூ.6,000 ஆகவும் பாஸ்பரஸ் அடிப்படை விலையில் ரூ.32,000 ஆகவும் உயர்ந்துள்ளது.
இது தவிர மற்ற மூலப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதுள்ளதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கும், மொத்த வியாபாரிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் குறைந்த லாபம் கூட இல்லை.
கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததால் ஒன்று அல்லது இரண்டு பகுதி வேலைகளை நவீன இயந்திரத்தின் மூலம் தொழிலாளர்கள் தட்டுபாட்டை ஓரளவு சமாளித்துக் கொண்டு மேலும் தேவையான தொழிலாளர்களை 60 கிலோமீட்டருக்கு அப்பால் கம்பெனி வாகனம் மூலம் அழைத்து வந்து தீப்பெட்டி உற்பத்தி செய்தனர்.
நவீன மயமாக்குதல் பெண் தொழிலாளர்களுக்கு 50 சதவீதம் அதிக ஊதியம் வழங்குவதுடன் இந்த பகுதியில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது.
முன்பெல்லாம் மாதத்திற்கு 6 கன்டெய்னர் தீப்பெட்டி ஏற்றுமதி செய்யப்பட்ட கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி பகுதிகளில் தற்போது மாதம் 150 கண்டெய்னர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.200
கோடி அந்நிய செலவாணி ஈட்டுகிறது.
இந்நிலையில் இந்த தொழிலுக்கு உள்நாட்டு விற்பனை வரியாக மத்திய அரசு 12 சதவீதம் விதித்துள்ளது. இதனால் ஒரு தீப்பெட்டி 50 பைசாவிலிருந்து ரூ.1க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது.
மேலும் தற்போது டாலர் விலை சரிவினால் தீப்பெட்டி ஏற்றுமதியில்
லாபமில்லாமல் ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேங்கியுள்ளன.
முதல்வர் கருணாநிதி இயந்திர தீப்பெட்டிக்கு வாட் வரியிலிருந்து முழு விலக்கு அளித்தார். இதே போல் மத்திய அரசும் 12 சதவீத கலால் வரியை வரும் 2008 மத்திய பட்ஜெட்டில் நீக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வெளிநாடு ஏற்றுமதி ஊக்கதொகை 7 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். இந்த கலால் வரி நீக்கப்பட்டால் மீண்டும் தீப்பெட்டியை 50 பைசாவிற்கு வழங்குவோம் என்றார் தேவதாஸ்.