தூக்கில் தொங்கத் தயார்-கரூர் அதிமுகவினர் கதறல்
கரூர்: சசிகலாவின் கணவர் நடராஜனை சந்தித்ததை ஆதாரத்துடன் நிரூபித்தால் தற்கொலை செய்யத் தயார் என்று கூறி தூக்கு கயிற்றுடன் கரூர் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 1ம் தேதியன்று ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் கரூரில் காவிரி நதி நீர் விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டதுடன், நடராஜன் தங்கியிருந்து ஹோட்டலுக்கு சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் 13 பேரை அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா கட்சியை விட்டு அதிரடியாக நீக்கினார்.
கரூர் தொகுதி எம்எல்ஏவும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ள செந்தில் பாலாஜி தான் தலைமைக்கு தவறான தகவல் கொடுத்து பலரை நீக்கினார் என்று பாதிக்கப்பட்டவர்கள் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு நேரில் சென்றும், சென்னை அதிமுக தலைமை அலுவலத்திலும் புகார் அளித்தனர். இது குறித்து உடனே விசாரிக்க ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இது குறித்து அதிமுக தலைமை கழகத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
அப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இருவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,
நாங்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை அதிமுகவின் தீவிர தொண்டர்கள். உயிரே போனாலும் கட்சியை விட்டு மாற்று கட்சிக்கு செல்லாதவர்கள். இரவும், பகலும் கட்சி பணி செய்து வருகிறோம்.
எங்கள் மனதில் உள்ள வேதனை என்னவென்றால் டிசம்பர் 1ம் தேதியன்று சசிகலாவின் கணவர் நடராஜன் கரூர் வந்த போது அவரை கரூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
கரூர் தொகுதி எம்எல்ஏவும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ள செந்தில் பாலாஜிக்கு வேண்டப்பட்டவர்களும், அவரால் அனுப்பி வைக்கப்பட்ட சிலரும் தான் காலை முதல் இரவு வரை நடராஜனுடன் இருந்தனர். அவர்கள் பெயரை தலைமைக்கு அனுப்பாமல், ஏதோ ஒரு ஆதாயத்திற்காக அவர்களை செந்தில் பாலாஜி காப்பாற்றியதுடன், தனக்கு பிடிக்காதவர்களின் பெயர்களை தலைமையிடம் சொல்லி எங்களை கட்சியை விட்டு நீக்க வைத்துள்ளார்.
நாங்கள் நடராஜனை அன்றைய தினம் சந்திக்கவே இல்லை. அப்படி சந்தித்தாக எங்கள் மீது மாவட்டச் செயலாளர் ஆதாரத்துடன் கூறினால் தூக்கு கயிற்றில் தொங்க தயார் எனக் கூறி தாங்கள் கையுடன் கொண்டு வந்த தூக்கு கயிற்றை எடுத்து காட்டியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து கரூர் எம்எல்ஏவும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜியை வரவழைத்த தலைமை கழக நிர்வாகிகள் இது குறித்து அவரிடமும் விளக்க கடிதம் பெற்று ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
நடராஜனால் அதிமுகவினர் படும்பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது.