கருணாநிதி எச்சரிக்கை எதிரொலி-விளம்பரப் பலகைகள் அகற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் விதிமுறைகளுக்குப் புறம்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பத் தட்டிகளை அகற்றும் பணியில் போலீஸார் இறங்கியுள்ளனர். சென்னையில் இன்று மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில் போலீஸார் விளம்பர போர்டுகளை இன்று அகற்றினர்.
தமிழகம் முழுவதும் விதிமுறைகளுக்குப் புறம்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பத் தட்டிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரித்திருந்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,
தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும், கிராமப்பகுதிகளிலும் விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்காக வைக்கப்படும் விளம்பரத்தட்டிகள், அவை நடைபெறுவதற்கு முதல் மூன்று நாட்களுக்கு முன்பும், நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு 2 நாட்களுக்கும் அனுமதிக்கப்படும் என்று ஏற்கனவே அரசின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகும் ஒரு சிலர் தாங்கள் வைத்திடும் விளம்பரத் தட்டிகளை நிகழ்ச்சிகளுக்கு பல நாட்களுக்கு முன்பே வைத்தும், நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த பிறகு பல நாட்களுக்கு அவைகளை எடுக்காமலும் தொடர்ந்து அந்த விளம்பரங்களை வைத்துள்ளார்கள் என்ற தகவல் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
எனவே முதல்வர் கருணாநிதி இது குறித்து கூட்டிய கூட்டத்தில், இவ்வாறு முறைகேடாக வைக்கப்படும் விளம்பரத் தட்டிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் துறையினரே அகற்றிடும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்றும், அதற்கான செலவினை அவற்றை வைத்திடும் அமைப்புகளிடமிருந்து பெறுவார்கள் என்றும் முடிவெடுத்து அறிவிக்கப்படுகிறது.
எனவே இத்தகைய விளம்பரத் தட்டிகளை வைப்போர் இனிமேலாவது அரசின் இந்த அறிவிப்பை ஏற்று அவர்களாகவே குறிப்பிட்ட நாட்களுக்கு மேலாக இடம் பெறச் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அறிவிப்பை மீறி நடப்பவர்கள் நகரின் அல்லது ஊரின் தூய்மையைப் கெடுக்க நினைப்போர் என்பது மாத்திரமல்லாமல், அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அரசு எச்சரிக்கை செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று இரவு முதல் விளம்பர போர்டுகளை அகற்றும் பணியில் போலீஸார் இறங்கினர்.
சென்னை காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில் வடசென்னை இணை ஆணையர் ரவி, மத்திய சென்னை இணை ஆணையர் பாலசுப்பிரமணியம் ஆகியோரது மேற்பார்வையில் விளம்பர பலகைகளை போலீசாரே அகற்றினர்.
வடசென்னை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போர்டுகளும், மத்திய சென்னையில் 200-க்கும் மேற்பட்ட போர்டுகளும் அகற்றப்பட்டன.
இனிமேல், எந்த விழாவாக இருந்தாலும் 3 நாட்களுக்கு முன்னர் தான் விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர்களை கட்ட வேண்டும். விழா முடிந்து 2 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களே அகற்ற வேண்டும். இல்லையென்றால் அந்த பகுதியில் உள்ள போலீசார் போர்டுகளை அகற்றுவார்கள். இதற்குண்டான செலவு விழா நடத்தியவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல தமிழகம் முழுவதிலும் விளம்பர போர்டுகளை அகற்றும் வேலையில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
முதல்வர் சொல்லும் வரை காத்திருக்காமல், காவல்துறையினரே தமிழகம் முழுவதும் தீவிரமாக இருந்தால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அந்த மதம், இந்த மதம் என்று பாரபட்சம் பார்க்காமல் இரும்புக் கரம் கொண்டு இதுபோன்ற விளம்பர போர்டு விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால் இந்தத் தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.