தீட்சிதர்கள் திடீர் பல்டி-தேவாரம் பாடியவர்களுக்கு மாலை மரியாதை!
தமிழில் பாட வருபவர்களைத் தடுத்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்ததையடுத்து தீட்சிதர்கள் இந்த பல்டி அடித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேவராம், திருவாசகம் மற்றும் பிற திருமறைகள் பாடப்பட்டன. ஆனால் தீட்சிதர்கள் போட்ட தடையால் அன்று முதல் இன்று வரை தேவாரம் பாட வழியில்லாமல் இருந்து வந்தது.
சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும் என இவர்கள் கூறி வந்தனர்.
இந் நிலையில், தேவராம் மற்றும் பிற திருமறைகளைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து ஆறுமுகச்சாமி ஓதுவார் தலைமையில் சிவனடியார்கள் தேவாரம் பாடச் சென்றபோது அவர்களை தீட்சிதர்கள் தடுத்து தாக்கினர். அமைதி ஏற்படுத்த முயன்ற போலீஸாரையும் தீட்சிதர்கள் தாக்கினர்.
இதையடுத்து அதிரடியாக உள்ளே புகுந்த போலீஸார் தீட்சிதர்களைக் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே போட்டனர். மேலும் போலீஸாரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி 11 தீட்சிதர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் தேவாரம் பாட ஆறுமுகச்சாமி தலைமையில் சென்ற சிவனடியார்கள் தடுத்துக் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் கலை இலக்கிய கழகம்:
ஓதுவார்களுக்கு ஆதரவாக மனித உரிமை பாதுகாப்பு மையம், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகியவை களமிறங்கின.
இன்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாட கோவிலுக்குள் செல்லப் போவதாக மக்கள் கலை இலக்கியக் கழகம் அறிவித்தது. இதனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெரும் பதற்றம் நிலவியது.
சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சிதம்பரத்துக்கு வந்து கொண்டுள்ள நிலையில் நடராஜர் கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். கோவிலுக்குள்ளும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
'பல்டி'- மாலையிட்டு வரவேற்ற தீட்சிதர்கள்:
இந்த நிலையில் இன்று சிவனடியார்கள் சிலர் குழுவாக தேவாரம் பாட நடராஜர் கோவிலுக்குச் சென்றனர்.
அவர்களை தீட்சிதர்கள் மாலை அணிவித்து மரியாதையுடன் திருச்சிற்றம்பலத்திற்குக் கூட்டிச்சென்றனர். இதனால் மகிழ்ந்த சிவனடியார்கள், தேவராம் மற்றும் திருவாசகத்தை பக்திப் பிரவாகத்துடன் பாடி வணங்கினர்.
விடுவிக்க முதல்வர் உத்தரவு:
இதற்கிடையே, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவனடியார்கள் நேற்று காலை முதல் உண்ணாவிதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து சிவனடியார்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.