அன்னியச் செலாவணி: சசிகலா, பாஸ்கரனுக்கு ரூ. 18 கோடி அபராதம்
1995ம் ஆண்டு ஜெ. ஜெ. டிவிக்குரிய சாதனங்களை இறக்குமதி செய்ததில் மத்திய அரசின் முன் அனுமதியைப் பெறவில்லை. இதுதொடர்பாக அன்னியச் செலாவணி மோசடி சட்டத்தின் (பெரா) கீழ் ஜெ.ஜெ டிவியின் இயக்குநர்களாக இருந்த சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு சில வழக்குகளைப் பதிவு செய்தது.
ஒரு வழக்கில், பெரா சட்டத்திற்கு முரணாக, ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி 6.80 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை ஜெஜெ டிவி நிறுவனமும், அதன் இயக்குநர்களும் வெளிநாடுகளிலிருந்து பெற்றனர். இந்தப் பணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ரிம்சாட் நிறுவனத்திற்கும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சுபி பே சாட்டிலைட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் கட்டணமாக வழங்கியுள்ளனர்.
ஜெஜெ டிவி நிறுவனத்தின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கும், நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரு நிறுவனங்களுடனும், ஆண்டு கட்டணமாக 13.6 லட்சம் அமெரிக்க டாலர் தொகையை செலுத்துவது தொடர்பாக ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதுவும் ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது பெரா சட்டத்தை மீறிய செயலாகும் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கை எதிர்த்து சசிகலாவும், பாஸ்கரனும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் பொருளாதார இயக்குநரகத்தை அணுகி நிவாரணம் காணுமாறு அவர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து சசிகலாவும், பாஸ்கரனும் பொருளாதார இயக்குநரகத்திடம் மனு செய்தனர். அதில் பெரா சட்டம் இப்போது காலாவதியாகி விட்டது. எனவே பெமா சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த கோரிக்கையை பொருளாதார இயக்குநரகம் ஏற்றுக் கொண்டது. அதேசமயம், ஜெஜெ டிவி நிறுவனத்திற்கு ரூ. 8 கோடியும், சசிகலாவுக்கு ரூ. 6 கோடியும், பாஸ்கரனுக்கு ரூ. 4 கோடியும் அபராதம் விதித்து பொருளாதார இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே. சசிகலாவும், பாஸ்கரனும் இந்த அபராதத் தொகையை கட்டியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.