பெங்களூரில் 16ம் தேதி தமிழ் மக்கள் இயக்கம் பேரணி
இந்த அமைப்பின் தலைவர் சி.ராசன், பொதுச்செயலாளர் ஆரோக்கிய நாதன் உள்பட 15 பேர் கொண்ட குழு பெங்களூர் கமிஷனர் நீலம் அச்சுதராவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அதி்ல், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ரக்ஷண வேதிகே, வாட்டாள் நாகராஜ் மற்றும் வெவ்வேறு கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றன.
தமிழ் சேனல்களை நிறுத்தி விடுவோம், தமிழ் பத்திரிகைகளை அச்சிட விடமாட்டோம், தமிழக பஸ்களை நிறுத்துவோம், அசம்பாவிதத்தை சந்திக்க நேரிடும் என்றெல்லாம் அமைதியை கெடுக்கும் விதத்தில் கூறி வருகிறார்கள்.
இது கர்நாடக ரக்ஷண வேதிகே மற்றும் கன்னட அமைப்புகளுக்கு பெருமை தருவது அல்ல.
கர்நாடகத்தில் காவிரி பிரச்சினை தொடங்கிய போது இங்குள்ள தமிழர்களும், தமிழ் அமைப்புகளும், தாழ்த்தப்பட்ட மக்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து கர்நாடகத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே.
இந் நிலையில் தங்களிடம் சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறோம். அவை:
கர்நாடகத்தில் சகோதரர்களாக வாழும் கன்னடர்கள், தமிழர்கள் இடையே அமைதியை சீர்குலைக்கும் வகையில் தூண்டி விடும் கர்நாடக ரக்ஷண வேதிகே, கன்னட சலுவளி வாட்டாள் நாகராஜ் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கன்னட அமைப்பின் தலைவர்களை உடனடியாக கைது செய்து சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலக்கிய அமைப்பாக செயல்பட்டு வரும் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
தொலைகாட்சிகளில் தமிழ் ஒளிப்பரப்பு நிறுத்துவது, தமிழ் திரைப்படங்களை நிறுத்துவது, தமிழ் பத்திரிகை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை அடக்கி பொதுமக்களுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவும் பகுதிகள் மற்றும் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் கூலித் தொழிலாளர்களுக்கு கூடுதலான பாதுகாப்பு தர வேண்டும்.
எங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, சிறுபான்மையினரான எங்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி பகல் 2 மணிக்கு அல்சூர் ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ். பள்ளி மைதானத்தில் இருந்து கவர்னர் மாளிகை வரை மாபெரும் பேரணியை நடத்த முடிவு செய்து உள்ளோம்.
இதற்கு அனுமதி வழங்கவும், பேரணிக்கு போதிய பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.