காங்கிரஸ், திமுக கூட்டுச் சதி - கூறுகிறார் கெளடா
பெங்களூர்: ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பதன் பின்னணியில் சதித் திட்டம் இருப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவர் தேவெ கெளடா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரில் நிருபர்களிடம் தேவெ கெளடா கூறுகையில், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கர்நாட மக்களுக்கெதிராக திமுக அரசும், காங்கிரஸ் கட்சியும் செய்துள்ள கூட்டுச்சதி.
கர்நாடக மக்களை முட்டாளாக்குவதற்காகவும், மத்திய அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய கூட்டாளியிடம் இந்த திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒகேனக்கல் திட்டத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்து, எந்த விளைவுக்கும் அஞ்சாமல் அதை நிறைவேற்றுவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையால் தான் இருமாநிலங்களிலும் பிரச்னை கிளம்பியது.
சட்டப்படி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதி கர்நாடகாவுக்குத்தான் சொந்தம். இந்தப் பகுதியில் கூட்டு சர்வே எடுத்தால்தான் உண்மை நிலவரம் தெரியும்.
ஒகேனக்கல் பிரச்னையில் கர்நாடகத்தின் நிலைமை, பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங்கின் நிலைமைக்கு ஒப்பாகும். இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. தூக்குநாள் என்றைக்கு எனத் தெரியவில்லை. அதை பாகிஸ்தானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முடிவெடுக்கும் என்று கூறிவிட்டார்கள்.
கர்நாடகத்திலும் அதே நிலைதான். கர்நாடக தேர்தல் முடிந்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும்வரை ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாமல் நிறுத்திவைத்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தோழமை உணர்வு கொண்ட கர்நாடக மாநிலத்தினர், தமிழக மக்களுக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய நியாயமான பங்கை கிடைக்கவிடாமல் தடுக்க மாட்டார்கள். இருக்கின்ற இயற்கை வளத்தை நியாயமாகவும், சமமாகவும் இரு மாநிலங்களும் பிரித்துக் கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.
துரதிருஷ்டவசமாக, இந்த மாநில மக்களுக்கு நீண்டகாலமாகவே நியாயமாக சேரவேண்டிய பங்கு மறுதலிக்கப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும், சுதந்திரம் பெற்றபிறகும் கூட இதே நிலைதான்.
மத்திய அரசின் சுரண்டலுக்கும், மாற்றாந்தாய் போக்கும் கர்நாடக மக்கள் ஆளாகிவருகின்றனர். காவிரி பிரச்னையில் நம் உரிமையை நிலைநாட்டும்வரை நமது போராட்டம் ஓயப்போவதில்லை. அதேசமயத்தில் கன்னட ஆதரவு அமைப்புகள் அமைதி காக்கவேண்டும்.
இரு மாநில மக்களிடையே உள்ள உறவை பாதுகாக்கவேண்டிய கடமை நமக்குள்ளது. பஸ்களை எரிப்பது, தமிழ்படங்களை திரையிடுவதற்கு தடைவிதிப்பது போன்ற செயல்கள் தேவையில்லாதது என்றார் கெளடா.