இந்த ஆண்டு முதல் பல்கலைகளாகும் 6 தமிழக கல்லூரிகள்
சென்னை மாநிலக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, கோவை அரசு கல்லூரி, கும்பகோணம் அரசுக் கல்லூரி ஆகிய 4 கலைக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படவுள்ளன.
மேலும் கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜ பொறியியல் கல்லூரி ஆகியவையும் இந்தக் கல்வியாண்டு முதல் ஒருமை வகை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படவுள்ளன.
இத் தகவலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தெரிவித்தார்.
இந்தியாவில் இப்போது 350 பல்கலைக்கழகங்கள் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்த வேண்டு்ம் என சாம் பிட்ரோடா தலைமையிலான தேசிய அறிவுசார் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதன் அடிப்படையில் நாடு முழுவதும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன என்றார் பொன்முடி.
இதன் மூலமே உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க முடியும் என்றார். இப்போது பள்ளிப் படிப்பைத் தாண்டும் மாணவர்களில் 12 சதவீதத்தினரே உயர் கல்விகளில் சேருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4,344 விரிவுரையாளர்கள் புதிய நியமனம்:
மேலும் தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் 4,344 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் வரும் கல்வியாண்டில் நிரப்பப்படும் என்றும் பொன்முடி அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வரும் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,062 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இதில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 522 பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலமாகவும், மீதமுள்ள 540 பணியிடங்கள் பொது நியமனம் மூலம் நிரப்பப்படும்.
அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் 640ம் இந்த ஆண்டே நிரப்பப்படும். மொத்தம் 1,744 பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படுகிறது. இதுதவிர, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2,600 பணியிடங்கள் நிரப்ப அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆட்சியில் மொத்தம் 5,076 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பதற்கு முன்பு பல்கலைக்கழகங்களில் இணைவு பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
இனி 'பெயில்' இல்லை:
மேலும் தியாகராஜன் குழு பரிந்துரையை ஏற்று இந்தாண்டு முதல் கல்லூரி மதிப்பென் சான்றிதழில் ஃபெயில் (எஃப்) என்பதற்கு பதிலாக 'திரும்பவும் எழுத வேண்டும்' (ஆர்.ஏ.) எனக் குறிப்பிடப்படும் முறை அமல்படுத்தப்படும்.
பல்கலைக்கழகங்களில் தற்போது நடைமுறையிலுள்ள மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக, இனி 'கிரேடு' முறையை செயல்படுத்த பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்படும்.
அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளின் தொடக்கத்திலும், பின் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்றார் பொன்முடி.