50 வயது மாமன் மகளை மணந்த 64 வயது மணமகன்!
தஞ்சை: தாய்க்காக கல்யாணமாக செய்துகொள்ளாமல் இருந்து வந்த தஞ்சையைச் சேர்ந்த 64 வயதான முன்னாள் சத்துணவு அமைப்பாளர், தாயின் மரணத்திற்குப் பிறகு தனது அக்காள் மகளான 50 வயதுப் பெண்மணியை உற்றார், உறவினர் புடை சூழ கரம் பிடித்தார்.
ஹரிதாஸ் (64) தஞ்சையைச் சேர்ந்தவர். கடந்த 1962 ம் ஆண்டுமுதல் 1971 ம் ஆண்டுவரை தஞ்சை சௌராஷ்ட்ரா ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது பார்வைக் குறைவு ஏற்பட்டதால் ஹரிதாஸ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அதன்பிறகு அவருக்கு 1966 ம் ஆண்டு அவருக்கு அரசு பணி கிடைத்தது. ஆனால் பார்வைக் குறைவின் காரணமாக அவரால் அந்த பணியிலும் சேர முடியவில்லை.
இந்நிலையில் 1982 ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் தமது நிலையை எடுத்துக் கூறி தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய நிலையை உணர்ந்த முதல்வர் ஹரிதாசுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க உத்தரவிட்டார்.
இதனிடையில் சத்துணவு அமைப்பாளர் பதவியை பார்த்துக்கொண்டே இவர் நாடக மன்றத்தில் சேர்ந்து நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார்.
இவருடன் பிறந்த 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகளுக்கு திருமணம் நடந்து விட்டது. ஆனால் ஹரிதாஸ் மட்டும் கல்யாணத்தை தள்ளிப் போட்டு விட்டார். காரணம், தனது தாயாரை கவனிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயம்தான்.
மேலும், தனக்கு திருமணம் நடந்து தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பார்வைக் கோளாறு ஏற்பட்டு விடுமோ என்ற பயமும் ஒரு காரணம்.
தனது அண்ணன் பிள்ளைகளிடம் பணம் கொடுத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், 92 வயதில் அவரது தாயார் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து உறவினர்கள், கடைசிக் காலத்தில் துணை ஒன்று வேண்டும் என்று ஹரிதாஸிடம் எடுத்துக் கூறினர்.
இதையடுத்து தனது சகோதரி பார்வதியின் மகளான யோகலட்சுமியை (இவருக்கு வயது 50) மணக்க சம்மதித்தார் ஹரிதாஸ். பல்வேறு காரணங்களால் யோகலட்சுமியும் கல்யாணமாகாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து தஞ்சையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் திருமணம் நடந்தது. உற்றார், உறவினர் அனைவரும் திரண்டு வந்து மணமக்களை ஆசிர்வதித்தனர்.