செப். முதல் சென்னை விமான நிலைய விரிவாக்க பணி
டெல்லி: கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையங்களை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி அடுத்த மாத இறுதியில் தொடங்குகிறது.
டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் 3வது விமான ஓடுபாதை நேற்று திறக்கப்பட்டது. ரூ.1,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஓடுபாதை ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் புறப்பட்டு பின்னர் தரையிறங்கியது.
அப்போது இருபுறத்திலும் தண்ணீர் பீய்ச்சியடித்து அந்த விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய 3வது விமான ஓடுபாதையினால், புறப்படும் விமானங்களும், தரையிறங்கும் விமானங்களும் மோதி கொள்ளும் சம்பவங்கள் இனி இருக்காது. இந்த விழாவில் கலந்து கொண்ட விமானத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் கூறியதாவது
கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்புப் பணி அடுத்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும். இதற்காக ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜிதம் செய்வதில் பிரச்சனை நிலவி வருகிறது. அது அந்த மாநிலத்தின் பிரச்சனை. விரிவாக்கத்தை செயல்படுத்த வேண்டுமானால் மாநில அரசுதான் நிலத்தை பெற்றுத் தர வேண்டும். அதையும் சீக்கிரம் பெற்றுத் தந்தால்தான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்ப முடியும்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் பயணிகள் மேம்பாட்டுக்காக கட்டணம் வசூலிக்க தனியார்களை அரசு அனுமதித்தது. அதேபோல பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திலும் கொண்டு வர பரிசீலித்து வருகிறோம். அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன் சாதக பாதகங்களை ஆய்வு செய்வோம்.
இது தொடர்பாக விமானத்துறை செயலாளர் அஷோக் சாவ்லா பெங்களூர் விமான நிலையத்தில் சமீபத்தில் ஆய்வு செய்தார். டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக கோரிக்கை அமைச்சகத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக சட்டப்பூர்வமாக முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications