ஒரிஸ்ஸா: மத வெறியர்களை ஒடுக்க வேண்டும்-திருமா
சென்னை: ஒரிஸ்ஸாவில் கிறிஸ்துவர்களாக மாறியவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இந்து மத வெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 23ம் தேதி ஒரிஸ்ஸாவின் காந்தமால் மாவட்டத்தில் தொடங்கிய இந்துத்துவ வெறியர்களின் வன்முறை வெறியாட்டம் கடந்த 5 நாட்களில் மாநிலம் முழுவதும் பரவி பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மீதும் கிறிஸ்துவ நிறுவனங்கள் மீதும் ஏவப்பட்டு வருகிறது.
ஒரிஸ்ஸா மாநிலத்திலும் கிறிஸ்துவ மதத்தை தழுவிய பழங்குடி மக்களை, பொய்யான வாக்குறுதிகளையும், ஆசை வார்த்தைகளையும் சொல்லி மீண்டும் இந்து மதத்தில் சேரவைத்து அப்பழங்குடி மக்களை மீண்டும் அடிமைகளாக மாற்றி கோலோச்ச வேண்டும் என்று மதவெறியுடன் செயல்பட்டு வந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த லட்சுமணானந்த சரஸ்வதி என்பவரை,
மாவோயிசப் போராளிகள், சுட்டுக் கொன்றதாக செய்தி வெளியானவுடன் இந்துத்துவ அமைப்பினர் கிறித்துவர்களுக்கு சொந்தமான தேவாலயங்களையும், பாடசாலைகளையும், வீடுகளையும், அலுவலகங்களையும் தாக்கி தீயிட்டு வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இத்தகைய வன்கொடுமைகளை விடுதலைச் சிறுத்தைகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதுடன் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
24ம் தேதி கட்டாக், புவனேஸ்வரம் மறைமாவட்டத்தை சேர்ந்த நவ்கான் என்ற இடத்தில் உள்ள ஜன்விகாஸ் கேந்திரம்' என்ற சேவை மையத்தில் பணியாற்றி வந்த ஒரு இளம் கன்னியாஸ்திரியை கூட்டமாய் வந்த இந்துத்துவ வெறியர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர்.
இந்த நிகழ்வு 1999ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி பழங்குடி மக்களிடையே சேவையாற்றிவந்த ஆஸ்திரேலிய மருத்துவர் கிரகாம் ஸ்டேன்ஸ் தமது இளம் மகன்கள் பிலிப், திமோத்தி ஆகியோருடன் எரித்து கொல்லப்பட்டதை நினைவூட்டுகிறது.
இந்துத்துவ மத வெறியர்களின் இந்த வன்முறை வெறியாட்டத்தை ஒரிஸ்ஸா மாநில அரசும், இந்திய அரசும் கட்டுப்படுத்தி இந்துத்துவ மத வெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதோடு,
பாதிப்புக்குள்ளான கிறிஸ்தவர் அனைவருக்கும் உரிய இழப்பீடும், பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications