தனி ஈழமே நிரந்தர தீர்வு: பாமக செயற்குழு தீர்மானம்
திண்டிவனம்: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தனித் தமிழ் ஈழம் அமைப்பதுதான், புலிகளுடன் இலங்கை அரசு உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகளும் முதல்வர் கருணாநிதியும் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் அக்கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் நிறுவனற் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இலங்கை இராணுவத்துக்கு ஆயுத உதவியும், போர் பயிற்சியும் அளிப்பதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்.
தமிழக மீனவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி வரும் இலங்கை கடற்படையினரின் கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தமிழக அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு பாமக செயற்குழு முழு ஆதரவு தெரிவிக்கிறது.
கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் தமிழத்தைச் சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் பதவி விலகும் முடிவையும் ஆதரிக்கிறோம்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வாகும். விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான முயற்சிகளை இந்திய அரசும், தமிழக அரசும், முதல்வர் கருணாநிதியும் எடுக்க வேண்டும்.
வீடுகளுக்கு 24 மணி நேரமும், விவசாயத்துக்கு குறைந்தது 8 மணிநேரமும், சிறுதொழில்களுக்கும், விசைத்தறிகளுக்கும் பகல் நேரத்திலும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
பெரிய தொழில் நிறுவனங்கள் டீசல் ஜெனரேட்டர்களை வைத்து இருந்தால், முழுக்க, முழுக்க அவற்றை இயக்கி மின்தேவையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்த வேண்டும்.
மாநிலத்தில் உள்ள அனல் மின்நிலையங்களில் முழு அளவிலான மின்உற்பத்தி செய்யப்படாததற்கு தரமற்ற நிலக்கரி உபயோகப்படுத்தப்படுவது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட வேண்டும்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டங்களுக்கும், விரிவாக்கத் திட்டங்களுக்கும் தேவையான நிலத்தை தாமதமின்றி ஒதுக்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக அரசை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.